DOOMS DAY

இவை அனைத்தும் உயிர்மை இதழில் வெளியான ராஜ்சிவாவின் கட்டுரைகளின் தொகுப்பு

பாகம்: 1
இன்னும் ஒரிரு மாதங்களில், 2012ம் ஆண்டு புதுவருடமாகப் பிறக்கப் போகிறது. இந்த நேரத்தில், பலர் பயத்துடன் பார்க்கும் ஒன்று உண்டென்றால், அது '2012ம் ஆண்டு உலகம் அழியப் போகிறது' என்ற விந்தையான செய்திக்கு உலக ஊடகங்கள் பல கொடுக்கும் முக்கியத்துவம்தான்.
"சரியாக இன்னும் ஒரு வருடத்தில் உலகம் அழியப் போகிறதா?" என்பதே பலரின் கேள்வியாகவும், பயமாகவும் இருக்கிறது.

இது பற்றி அறிவியலாகவும், அறிவியலற்றதாகவும் பலவித கருத்துக்களும், ஆராய்ச்சிகளும் தினமும் வெளிவந்து கொண்டே இருக்கிறது. அப்படி இந்த அழிவை ஏன் முக்கியப்படுத்த வேண்டும் என்று பார்த்தால், எல்லாரும் சுட்டிக் காட்டுவது ஒன்றைத்தான்.

அது….! 'மாயா'. 

மாயா இனத்தவர்களுக்கும், 2012ம் ஆண்டு உலகம் அழியப் போகிறது என்பதற்கும் என்ன சம்பந்தம்? இவர்கள் இந்த அழிவு பற்றி ஏதாவது சொன்னார்களா? அப்படிச் சொல்லியிருந்தால், என்னதான் சொல்லியிருப்பார்கள்? அதை ஏன் நாம் நம்ப வேண்டும்? இப்படிப் பல கேள்விகள் எமக்குத் தோன்றலாம்

இது போன்ற பல கேள்விகளுக்கு ஒரு விரிவான ஆராய்ச்சித் தொடர் மூலம் உங்களுக்குத் பதில் தரலாம் என்ற நினைத்தே உங்கள் முன் இந்தத் தொடரைச் சமர்ப்பிக்கிறேன்.
என்ன என்பது இது பற்றி விளக்கமாகப் பார்க்கலாமா…..?
உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் வீட்டில் வசித்த அனைவரும், ஒருநாள் திடீரென அந்த வீட்டிலிருந்து, அவர்கள் இருந்த சுவடே இல்லாமல் மறைந்தால் என்ன முடிவுக்கு வருவீர்கள்? திகைத்துப் போய்விட மாட்டீர்களா? ஆச்சரியத்துக்கும், மர்மத்துக்கும் உள்ளாகுவீர்கள் அல்லவா?

சரி, அதுவே ஒரு வீடாக இல்லாமல், உங்கள் வீடு இருக்கும் தெருவுக்குப் பக்கத்துத் தெருவே திடீரென ஒரே இரவில் மறைந்தால்….? ஒரு தெருவுக்கே இப்படி என்றால், ஒரு ஊர் மக்கள் மறைந்தால்….? ஒரு நாட்டு மக்கள் மறைந்தால்….?

ஆம்....! வரலாற்றில் இது நடந்தது. ஒரு நாட்டில் வாழ்ந்த, மிக மிக மிகச் சிறிய அளவினரை விட, மற்ற அனைத்து மக்களும், திடீரென அந்த நாட்டிலிருந்து ஒட்டுமொத்தமாக மறைந்துவிட்டார்கள். சரித்திரத்தில் எந்த ஒரு அடையாளங்களையும், மறைந்ததற்குச் சாட்சிகளாக வைக்காமல் மறைந்து போனார்கள்.
ஏன் மறைந்தார்கள்? எப்படி மறைந்தார்கள்? என்னும் கேள்விகளுக்கு மழுப்பலான பதில்களை மட்டுமே மிச்சம் வைத்துவிட்டு, மாயமாய் மறைந்து போனார்கள். எங்கே போனார்கள்? எப்படிப் போனார்கள்? யாருக்கும் தெரியவில்லை. எதுவும் புரியவில்லை.

இந்த மறைவின் மர்மத்தை ஆராய, ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் சென்ற ஆராய்ச்சியாளர்களுக்கு கிடைத்தது எல்லாமே ஒரு மாபெரும் அதிர்ச்சிகள். மாயாக்கள் விட்டுச் சென்ற சுவடுகளை ஆராய்ந்த அவர்கள் பிரமிப்பின் உச்சிக்கே போனார்கள்.

அறிவியல் வளரத் தொடங்கிய காலகட்டங்களில், இவை உண்மையாக இருக்கவே முடியாது, என்னும் எண்ணம் அவர்களுக்குத் தோன்றும்படியான பல ஆச்சரியங்களுக்கான ஆதாரங்கள் கிடைத்தன. அவை அவர்களை மீண்டும் மீண்டும் திக்குமுக்காடச் செய்தது.

இது சாத்தியமே இல்லாத ஒன்று. இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது என அறிஞர்கள் சிலர் பிரமிக்க, பலர் பின்வாங்கத் தொடங்கினார்கள்.

மாயா என்றாலே மர்மம்தானா? என நினைக்க வைத்தது அவர்கள் கண்டுபிடித்தவை.
சரி, அப்படி என்னதான் நடந்தது? ஆராய்ச்சியாளர்கள் அப்படி எதைத்தான் கண்டு கொண்டார்கள்? ஆராய்ந்த சுவடுகளில் அப்படி என்னதான் இருந்தது?

இவற்றையெல்லாம் படிப்படியாக நாம் பார்க்கலாம். ஒன்று விடாமல் பார்க்கலாம். அவற்றை நீங்கள் அறிந்து கொண்டால், இதுவரை பார்த்திராத, கேட்டிராத, ஆச்சரியத்தின் உச்சத்துக்கே போய்விடுவீர்கள்.

அவை என்ன என்பதை அடுத்து நாம் பார்ப்போமா……..!

 பாகம்: 2

முற்குறிப்பு: நான் எழுதப் போகும் மாயா பற்றிய இந்தத் தொடர் பற்றி, உங்களுக்குக் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். வேறுபட்ட அபிப்பிராயங்கள் இருக்கலாம். அவற்றை எல்லாம், எடுத்த எடுப்பிலேயே மறுக்க வேண்டும் என்று தயவுசெய்து உடன் மறுக்க வேண்டாம். இந்தத் தொடரை நான் முடிக்கும் வரை பொறுத்திருங்கள். பலருக்கு இது பகுத்தறிவுக்கு ஒத்துவராத, அறிவியல் ஒத்துக் கொள்ளாத சம்பவங்களாக இருக்கும். உண்மைதான். நானும் உங்களைப் போன்ற அறிவியலை நம்பும் ஒருவன்தான். எனவே முடிவு வரை பொறுத்துக் கொண்டு, இதை வாசியுங்கள்.

கடந்த தொடரில், சுவடே இல்லாமல் ஒரு இனம் எப்படி அழிந்திருக்கலாம் என மாயாக்கள் வாழ்ந்த இடங்களை ஆராயச் சென்ற ஆராய்ச்சியாளர்களுக்குக் கிடைத்தது ஒரு மாபெரும் அதிர்ச்சி. மாயாக்கள் விட்டுச் சென்ற கல்வெட்டுகளை ஆராய்ந்த அவர்களை பிரமிப்பின் உச்சிக்கே கொண்டு சென்றது அது.

சரி, அப்படி என்னதான் நடந்தது? அங்கு என்னதான் இருந்தது? என்ற கேள்வியுடன் கடந்த பதிவில் விடைபெற்றோம் அல்லவா..?

அதை உங்களுக்கு விளக்குவதற்கு முன்னர், வேறு ஒரு தளத்தில் நடந்த, வேறு ஒரு சம்பவத்துடன் இன்றைய தொடரை ஆரம்பிக்கிறேன். இப்போது சொல்லப் போகும் இந்தச் சம்பவத்துக்கும், மாயாவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஆனாலும் வேறு வகையில் சம்பந்தம் உண்டு.

இராஜராஜ சோழன் என்னும் மாபெரும் தமிழ் மன்னனை யாரும் மறந்திருக்க மாட்டோம். தமிழ்நாட்டில் கி.பி. 985ம் ஆண்டு முதல் கி.பி. 1012 ஆண்டு வரை தஞ்சையை தலைநகராகக் கொண்டு அரசாண்டு வந்த சோழ மன்னன்தான் இராஜராஜன்

இன்றும் உலகம் தமிழனைத் திரும்பிப் பார்க்கும் வண்ணம், அவன் உலக அதிசயங்களுக்கு நிகரான ஒரு அழியாச் சின்னத்தைக் கட்டினான். அதுதான் தஞ்சையில் அமைந்துள்ள, 'தஞ்சைப் பெரிய கோவில்' என்றழைக்கப்படும் பிரமாண்டமான கோவில்.

அதன் மிகப் பிரமாண்டமான இராஜகோபுரம் மிகவும் அழகான கலை நயத்துடன் கட்டப்பட்டது. அதில் யாருமே எதிர்பார்க்காத விசேசம் ஒன்று இருந்ததுதான் இங்கு நான் ராஜராஜ சோழனை இழுப்பதற்குக் காரணம்.

ஆம்! அந்தக் கோபுரத்தில் காணப்பட்ட ஒரு உருவச் சிலை எல்லாரையும் புருவத்தை உயர்த்த வைத்தது. ஒரு இந்துக் கோவில் கோபுரத்தில் இது சாத்தியமா? என்னும் கேள்விகள் ஒலிக்கும் வகையில் இருந்தது அந்த உருவச் சிலை. கோபுரங்களில் இந்துக்களின் நாகரீகங்களையும், கலைகளையும், தெய்வங்களையும் சிலைகளாக வடிப்பதுதான் நாம் இதுவரை பார்த்தது.

ஆனால் இது........! அப்படி அந்தக் கோபுரத்தில் இருந்த உருவச் சிலை என்ன தெரியுமா....?

ஒரு மேலைத் தேச நாட்டவன், தலையில் தொப்பியுடன் காணப்படுகிறான். தஞ்சை மன்னனுக்கும் இந்துக்களின் ஆச்சாரத்துக்கும் ஏற்பே இல்லாத் தன்மையுடன் அந்தச் சிலை பெரிதாகக் காட்சியளிக்கிறது.
அந்தப் படம் இதுதான்........!
"முழங்காலுக்கும் மொட்டைதலைக்கும் முடிச்சுப் போடுவது போல" என்று சொல்வார்களே, அது போல இந்த மேலைத்தேச மனிதனின் சிலை, பாரம்பரியமிக்க இந்துக்களின் கோபுரத்தில் அமைந்திருக்கிறது என்றால், அதற்கென ஒரு காரணம் நிச்சயமாக இருந்தே தீருமல்லவா...?

இராஜராஜ சோழனின் காலத்தில் யவனர்களாக வந்து, எமது கோவிலிலேயே உருவமாக அமைவதற்கு, அந்த மேற்குலகத்தவனுக்கு வரலாற்றில் பதிவாகாத வலுவான காரணம் ஒன்று இருந்திருக்கும் அல்லவா…?

ஆனால், அதை ஆராய்வதல்ல இப்போது எங்கள் வேலை.

சம்பந்தமே இல்லாத இடத்தில், சம்பந்தமே இல்லாதவர்கள் தொடர்புபட்டிருப்பார்கள் என்பதற்கு எம்முள்ளேயே இருக்கும் சாட்சிதான் இது. இந்தச் சம்பவம் போலத்தான் மாயா சமூகத்தை ஆராய்ந்த ஆய்வாளர்களுக்கும் சம்பந்தமே இல்லாத வடிவங்களில் ஆச்சரியம் காத்திருந்தது.

அந்த ஆச்சரியமும் முடிச்சுப் போட முடியாத மூச்சை அடைக்கும் ஆச்சரியம்தான். தஞ்சையில் யவனன் இருந்தது ஒன்றும் பெரிய விசயம் இல்லை. ஆனால் மாயா இனத்தில் இருந்தவை திகைக்க வைத்தது.

அவை என்ன தெரியுமா……..?

மாயாக்களின் கல்வெட்டுகளை ஆராய்ந்தபோது அங்கு கிடைத்த சித்திரங்களிலும், சிலைகளிலும் வித விதமாக அயல்கிரக வாசிகளின் உருவங்கள்தான் காணப்பட்டன.
அட….! இதுவரை இந்த மனிதன் நல்லாத்தான் பேசிக் கொண்டிருந்தார். இப்ப என்ன ஆச்சு இவருக்கு என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. ஆனால் அது உண்மை என்பதுதான் மறுக்க முடியாத உண்மையாகவும் இருந்தது.

என்ன இது புதுக்கதையாக இருக்கிறதே என்பீர்கள்.

உண்மைதான். புதுக்கதைதான். புதுக்கதை மட்டும் அல்ல, புதிர்க்கதையும் கூட. எனவே அவை பற்றி நிறைய எழுத வேண்டும். அதனால் முதலில் முன்னோட்டமாக மாயாக்களிடம் கண்டெடுத்த ஒரு படத்தைப் போடுகிறேன் நீங்களே பாருங்கள்.
ஏதாவது தெரிகிறதா? அல்லது புரிகிறதா…?

நவீன யுகத்தினர் விண்ணுக்கு அனுப்பிய ராக்கெட்டின் வடிவை ஒத்ததும், அந்த ராக்கெட்டை இயக்கும் ஒரு மனிதன் சாய்ந்த நிலையில் அமர்ந்திருக்கும் அமைப்பிலும் ஒரு சித்திரம் கண்டெடுக்கப்பட்டது. அது சதுர வடிவிலான கல்லில் செதுக்கப்பட்டிருக்கிறது. ஒரு மனிதன் சாதாரணமாக அப்படி அமர்ந்திருக்க எந்த ஒரு தேவையும் இல்லாத விதத்தில் அமைந்த சித்திரம் அது

மாயன் வாழ்ந்த இடங்களில் அமைந்த பிரமிடுகளுக்கள் ஒன்றில் அமைந்திருந்த சுரங்கத்தில் அவர்களின் அரசன் ஒருவன் புதைக்கப்படிருக்கிறான். அந்த அரசனின் உடலை வைத்து மூடிய இடத்தில் இந்தச் சித்திரம் கண்டெடுக்கப்பட்டது. இந்தச் சித்திரத்தில் இருப்பது மாயன்களின் அரசனாக இருப்பதற்கும் சான்றுகள் உண்டு என்றாலும், அந்தச் சித்திரம் ஏன் அப்படி வரையப்பட்டிருக்கிறது என்பது மிகப் பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.

சரி, இது தற்செயலாக நடந்த ஒன்றாக இருக்கலாம் அல்லது இந்தச் சித்திரம் வேறு எதையோ குறிக்கலாம் என்று ஒதுங்கப் போனவர்களுக்கு, அவற்றுடன் கிடைத்த வேறு பல பொருட்கள் சந்தேகங்களை மேலும் வலுவடையச் செய்தது.

அப்படி என்னதான் கிடைத்தன..?

அதை அடுத்த தொடரில் பார்க்கலாம்……!
 பாகம்: 3


"கடந்த தொடரில் ஏதோ ஒரு படத்தைப் போட்டுவிட்டு, அந்தப் படத்துக்கும், ராக்கெட்டுக்கும் (Rocket) சம்பந்தம் இருப்பதாகச் சொல்வதை எல்லாம் நாம் எப்படி நம்புவது? சொல்லப் போனால் அந்தப் படத்தில் இருப்பது ஏதோ ஒரு விதமான சித்திரம் அவ்வளவுதான்" என்று நீங்கள் நினைப்பீர்கள். அதில் தவறும் இல்லை. நானும் ஆரம்பத்தில் அப்படியேதான் நினைத்தேன், மாயா மக்களை முழுமையாக அறியும் வரை.

அந்தச் சித்திரத்தை மிகச் சரியாக உற்று நோக்கிப் பாருங்கள். அதில் ஒரு ஒழுங்கு முறையையும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இல்லாத அமைப்பையும், காட்சியையும் அது கொண்டிருப்பது, நிச்சயம் எமக்குத் தெரிகிறது. எதுவுமே இல்லாத ஒரு காலத்தில், எதையும் பார்க்காத ஒன்றை வைத்து இப்படி ஒரு  கலை வடிவைப் படைக்கும் சாத்தியம் அக்காலங்களில் இருந்ததாகத் தெரியவில்லை. அத்துடன் இந்தச் சித்திரம் மாயன்களால் கட்டப்பட்ட 'பிரமிட்' (Pyramid) வடிவக் கட்டடங்களுக்குக் கீழே இருந்த ஒரு சுரங்கத்தில், பாதுகாப்பாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு மறைக்கப்பட்டிருந்தது  (இந்தப் பிரமிட்டுகள்தான் எமக்கு மாயன்கள் பற்றிய ஆச்சரியங்களைப் பின்னர் கொடுக்கப் போகின்றன).


அந்தச் சித்திரம் கண்டெடுக்கப்பட்ட பிரமிட்டை மேலேயும், அதன் சுரங்கவழியைக் கீழேயும் தந்திருக்கிறேன். இதைப் பார்க்கும்போது, மாயாக்கள் இந்தச் சித்திரத்துக்குக் கொடுத்த முக்கியத்துவம் உங்களுக்குப் புரியும்.


"அதெல்லாம் சரிதான். இது ஒன்றை வைத்துக் கொண்டு மாயாக்களுக்கும், ராக்கெட்டுக்கும் சம்பந்தம் உண்டு என்று, எப்படி முடிவெடிக்க முடியும்" என்னும் கேள்வி சுலபமாக எமக்குத் தோன்றுவது இயல்புதான். ராக்கெட்டுடன் சம்பந்தம் என்றால், அப்புறம் விண்வெளிதானே! இதற்கெல்லாம் சாத்தியம் என்பதே கிடையாது என்று அடித்துச் சொல்லும் உங்கள் மனது.
 

அதனால் மாயன்கள் வாழ்ந்த இடங்களில் ஆராய்ச்சியாளர்கள் கண்டெடுத்த இவற்றை முதலில் பாருங்கள். நவீன வின்வெளிப் பிரயாணியின் படத்துக்கும், மாயாக்களின் மற்ற இரண்டு படங்களுக்கும் உள்ள தொடர்பை ஒப்பிட்டுப் பாருங்கள்.


இத்துடன் இவை முடிந்து விடவில்லை. மாயன்களின் ஆச்சரியங்கள் எம்மைத் தொடர்ந்தே தாக்குகின்றன. அந்த ஆச்சரியங்களை நான் சொற்களால் வடிப்பதை விடப் படங்களாகவே உங்களுக்குத் தந்தால்தான், அதிகமான விளக்கங்கள் உருவாகும்.
 

'ஆயிரம் வார்த்தைகள் சொல்லும் கருத்தை ஒரு காட்சி சொல்லிவிடும்' என்பார்கள். அதனால் உங்களுக்குப் புரிய வேண்டும் என்பதற்காக, நான் படங்களைத்தான் இனி அதிகமாகத் தரலாம் என நினைக்கிறேன்.
 

மாயன் கட்டடங்களை மேலும் ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் மாயன் பிரதேசமான மத்திய அமெரிக்காவில், அடுத்ததாக ஒன்றைக் கண்டதும் வெலவெலத்தே போய்விட்டனர். அவர்கள் ஏன் வெலவெலத்தனர் என்று நீங்கள் நினைக்கலாம். அவர்கள் எதைக் கண்டெடுத்தார்கள் என்பதை நீங்களே பாருங்கள்.


இந்தப் படத்தைத் தனியாகப் பார்த்தால் உங்களுக்குப் புரிவதற்கு சற்றுக் கடினமாக இருக்கலாம். எனவே, ஒரு நவீன விண்கலத்தில் நெருப்பைக் கக்கும் கீழ்ப்பகுதியையும், இந்தப் பொருளையும் சற்று ஒப்பிட்டுத்தான் பாருங்கள்.


இவற்றையும் தற்செயலென்றே நாம் வைத்துக் கொள்வோம். மாயன் சமூகத்தினர் எதையோ செய்து வைத்திருக்க, நான் அதை ராக்கட்டுடன் (Rocket) ஒப்பிட்டு சும்மா தேவையில்லாமல் பீதியைக் கிளப்புகின்றேன், அறிவியல் பற்றிப் பேசுவதாகச் சொல்லிவிட்டு ஒட்டுமொத்தமாக மூட நம்பிக்கையை வளர்க்கிறேன் என்றே வைத்துக் கொள்வோம்.
 

ஆனால் அடுத்து அகப்பட்டவை, எல்லாவற்றையும் அடியோடு தூக்கிச் சாப்பிட்டது. அதைப் பார்ததும் நான் சொல்வதில் ஏதும் உண்மை இருக்கலாமோ என்றும் நீங்கள் நினைப்பீர்கள். ராக்கெட்டைப் படமாக வரைந்திருப்பவர்கள் அதில் பயணம் செய்தவர்களையும் படமாக வரைந்துதானே இருக்க வேண்டும்.  இப்போது இந்தப் படங்களையும்  பாருங்கள்.
 

இது ஒரு தற்கால, விண்வெளிக்குச் செல்லும் நவீன மனிதனின் படம்.


இவை மாயன்களிடம் இருந்து பெறப்பட்ட வடிவங்கள்............!


இதற்கு மேலும் நான் இந்த விண்வெளி உடை போன்ற தோற்றத்துடன் படம் போடத் தேவையே இல்லை என்றே நினைக்கிறேன். இந்தப் படங்களே உங்களுக்குப் பல செய்திகளை விளக்கியிருக்கும்.
 

 மாயா சமூகத்தினரின் கலாச்சாரத்தை ஆராயும்போது  கிடைத்த ஓவியங்கள், சிலைகள் போன்றவற்றில், நவீன விண்வெளி ஆராய்ச்சி சம்பந்தமான பலவற்றைக் காணக் கூடியதாக இருந்தது என்னவோ உண்மை. அவை உண்மையிலேயே விண்வெளி சம்பந்தமானவைதானா? அல்லது வேறு அர்த்தங்கள் உள்ளனவா  என்னும் கேள்வி தொடர்ந்து எமக்குத் தோன்றுவதில் ஆச்சரியமில்லை. ஆனாலும் இது விண்வெளி சம்பந்தமானதுதான் என்றால்,  அதற்கு இதுவரை நான் கொடுத்த சாட்சியங்கள் போதுமானவைதானா?
 

அட, எப்பவும் விண்வெளி உடையிலேயே இருக்கிறீர்களே, வேறு எதுவுமேயில்லையா? என்கிறீர்களா!
 

சரி, இப்பொழுது இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, இது எப்படிச் சாத்தியம் என்று சொல்லுங்கள். இவை எதை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருக்கிறது என்று சொல்ல முடிகிறதா...?



பறவைகளா? பூச்சிகளா? இல்லை மீன்களா?
 

அல்லது................!
 

ஆகாய விமானங்களா....?
 

நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்........!
 

பூச்சிகள், பறவைகள், மீன்கள் என்றால், அந்த நடுவே இருக்கும் உருவத்தில், எப்படிக் காற்றாடி போன்ற அமைப்பு வந்தது?

என்ன தலை சுற்றுகிறதா.....?  ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் உருவாக்கப்பட்ட, தங்கத்தினால் செய்யப்பட்ட இந்த  உருவங்கள் சொல்லும் உண்மைகளை நாம் தாங்கிக் கொள்ள வேண்டும் என்றால், மேலும் பல உண்மைகளைத் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும். அந்த உண்மைகள் இவற்றை விடக் கனமானவை.


அந்த உண்மைகளைப் பற்றி அடுத்துப் பார்ப்போம்...........!


பாகம்: 4

மேலே உள்ள படத்தில் இருக்கும் இந்த மாயா இன மனிதன் என்ன செய்து கொண்டிருக்கிறார்? இந்தப் படத்தைப் பார்க்கும் போது, ஏதோ வித்தியாசமாகவும், ஆச்சரியமாகவும் உங்களுக்கு இருக்கும். அது என்னவாக இருக்கும் என்னும் பிரச்சினையை உங்களிடமே விட்டுவிட்டு நான் தொடர்கிறேன்.......!

கடந்த தொடரில் கொடுத்திருந்த படங்களில் இருப்பவை பறவைகளா? பூச்சிகளா? மீன்களா?  இல்லை விமானங்களா? என்னும் சந்தேகத்துடன் கடந்த பதிவில் உங்களிடமிருந்து விடைபெற்றிருந்தேன். அந்த  உருவங்கள் ஏற்படுத்திய பாதிப்பு உங்களை விட்டு அகலச் சிறிது காலமாகும், அந்த  அளவுக்கு உருவங்கள் இருந்தது என்னவோ நிஜம்தான். இல்லையா

இதுவரை, 'ரைட் சகோதரர்கள்' விமானத்தைக் கண்டுபிடித்தார்கள் என்று நம்பிக் கொண்டிருக்கும் வேளையில், அவற்றைப் புறம் தள்ளும் பல இரகசியங்கள் எங்கோ ஒரு மூலையில், மத்திய அமெரிக்காவில், எப்போதோ மறைந்திருக்கின்றது என்பது ஆச்சரியம்தானே! அதைவிட ஆச்சரியம், இந்தச் சிறிய விமானங்கள் போலுள்ளவற்றை விஞ்ஞானிகள் ஆராய்ந்த போது, அவை விமானப் பறப்புச் சக்திக்கு ஏற்ப உருவாக்கப்பட்டது என்பதைக் கண்டு கொண்டார்கள். ரைட் சகோதரர்கள் கண்டு பிடித்த விமானம் கூட மிகப் பழமை வாய்ந்தது. ஆனால்இந்த உருவங்கள் நவீன விமானங்கள் போல வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன. 

இதுவெல்லாம் எப்படிச் சாத்தியம்? விஞ்ஞான அறிவையும், விண்வெளி அறிவையும் மாயா இனத்தவர் பெற்றது எப்படி? ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் காட்டுவாசிகள் போல வாழ்ந்த மக்கள், எப்படி இவ்வளவு அறிவைக் கொண்டிருக்க முடியும்?  இப்படிப்பட்ட கேள்விகளுக்குப் பதிலாக, நாம் உடன் புரிந்துகொள்ளக் கூடியது,  விண்ணிலிருந்து மாயன் இனத்தவரை நோக்கி யாராவது வந்திருக்க வேண்டும் என்பதும், அவர்கள் மூலமாக மாயா இனத்தவர்களுக்கு இந்தளவுக்கு அறிவு கிடைத்திருக்க வேண்டும் என்பதும்தான். அப்படி இல்லையெனில், ஒன்றுமே இல்லாத ஒன்றுக்கு இவ்வளவு பில்டப்பை நான் கொடுப்பதாகவும் இருக்கலாம். 

ஒருவேளை விண்வெளியில் இருந்து அயல்கிரகவாசிகள் வந்திருந்தால்அவர்களை மாயாக்கள் பதிவு செய்திருப்பார்கள் அல்லவா? அப்படியானால் அவர்கள் எப்படி இருந்திருப்பார்கள்? 'ஏலியன்' என்று அழைக்கப்படும் அயல்கிரகவாசியின் வினோத தலையுடன் உள்ள உருவங்களை எத்தனை படங்களில்தான் நாம் பார்த்திருப்போம். அப்படிப்பட்ட உருவங்களை மாயன்களும் பார்த்திருப்பார்களோ?

ஆம்! அதற்கு சாத்தியங்கள் அதிகமாகவே காணப்படுவது போல மாயன் உருவாக்கிய வடிவங்கள் சில உள்ளன.  அவற்றை நீங்களே பாருங்கள்.......!
இந்த உருவங்களைப் பார்த்தீர்கள் அல்லவாஇவை அயல்கிரகவாசிகளின் உருவம்தான் என்றால், அவர்கள் மாயன்களிடம் மட்டும்தான் வந்திருக்க வேண்டுமா...?  இப்படிப்பட்ட ஆச்சரியங்கள் மாயன் இனத்தவருக்கு மட்டும்தான் ஏற்பட்டதா அல்லது வேறு யாருக்காவது ஏற்பட்டதாஅப்படி வேறு இனத்தவருக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டதா எனப் பார்க்கும் போது, அங்கும் எமக்கு ஆச்சரியங்களே காத்திருந்ததன.

பிரபலமான எகிப்திய பிரமிட்களை நீங்கள் நிச்சயம் அறிந்திருப்பீர்கள். பல மர்மங்களைத் தன்னுள்ளே அடக்கிய உலக அதிசயமாகப் பார்க்கப்படுவது இந்தப் பிரமிட்கள். இந்தப் பிரமிட்கள் என்றாலே எமக்குத் தோன்றுவது பிரமிப்புத்தான். 

எகிப்தியப் பிரமிட்களில் இருந்த சித்திர வடிவ எழுத்துகளை ஆராய்ந்த போது அங்கு கிடைத்ததும் அதிர்ச்சிதான்.

அப்படி என்னதான் இருந்தது?

கொஞ்சம் மூச்சை அப்படியே இறுக்கிப் பிடித்துக் கொள்ளுங்கள்............!

இப்போ இவற்றைப் பாருங்கள்..........!!
என்ன உங்களால்  நம்பமுடியவில்லையல்லவா? சினிமாப் படங்களில் வருவது போன்று, அதே வடிவிலான உருவம். ஆச்சரியமாக இல்லை அல்லது சினிமாப் படங்களில் இவற்றைப் பார்த்துதான் ஏலியன் உருவங்களை உருவாக்கினார்களா?

சரி, இதுக்கே அசந்தால் எப்படி? இன்னும் இருக்கிறது பாருங்கள்.
மேலே காட்டப்படிருக்கும் இரண்டு படங்களிலும் உள்ள வித்தியாசமான தலைகளுடன் கூடிய மனிதர்களைக் கவனியுங்கள். அப்படி உருவத்துடன் ஒப்பிடக்கூடிய எந்த ஒரு எகிப்தியரும் இருந்திருக்கவில்லை என்பதுதான் இங்கு ஆச்சரியம். மனித இனத்தின் தலையானது அன்று முதல் இன்று வரை சில குறிப்பிட்ட பரிமாணங்களைக் கொண்டதாகவே கூர்ப்படைந்து வந்திருக்கிறது. அது தாண்டிய எதையும் மனிதனாக எம்மால் பார்க்க முடிவதில்லை. ஆனால் பின்னால் நீண்டதாகக் காணப்படும் இத்தலையுள்ள உருவங்கள் எம்மை ஆச்சரியப்படுத்துகின்றன. 

இப்போது நான் தரும் இந்த உருவத்தைப் பாருங்கள்.........!
எகிப்திய மன்னன் பாரோ அகெனாட்டன் (Pharaoh Akhenaten) என்பவனின் மனைவி இவள். மகாராணி. இவள் வாழ்ந்த காலம் கி.மு.1370 இலிருந்து கி.மு.1330. இவள் பெயர்நெபர்டிடி (Nefertiti). இவளைப் பற்றி இங்கு ஏன் நான் சொல்கிறேன் என்று யோசிப்பீர்கள். காரணம் உண்டு.

இவளது தலைக் கவசம் இல்லாத சிலை ஒன்று கண்காட்சிச் சாலையில் இருக்கிறது. அது இதுதான்.
இவளது தலை ஏன் இவ்வளவு பெரிதாக இருக்க வேண்டும்? எகிப்திய வரலாற்றில் நெபர்டிடியின் சரித்திரம் மர்மம் வாய்ந்ததாகவே இருக்கிறது. இவள் அயல்கிரகத்தில் இருந்து வந்திருக்கலாமோ என்று நினைக்கத் தோன்றுகிறதல்லவா...?

சரி, நெபர்டிடியின் தலை கொஞ்சம் பெரிதென்றே நாம் வைத்துக் கொள்ளலாம். இவளுக்கும் ஏலியனுக்கும் சம்பந்தம் இல்லையென்றே எடுத்துக் கொள்வோம். ஆனால் நெபர்டிடியும் அவளது கணவனும் தங்கள் இரண்டு குழந்தைகளுடன் இருக்கும் இந்தச் சித்திரத்தைப் பார்த்ததும் அந்த நம்பிக்கையும் அடியோடு தகர்ந்து விடுகிறதல்லவா?
இவை எல்லாவற்றையும் விட்டுவிடலாம். எதுவுமே இல்லாததை நாங்கள் என்னென்னவோ சொல்லி மாற்றிவிடுகிறோம் என்றே வைத்துக் கொள்வோம். அப்படி என்றால் இந்தப் படம் என்ன சொல்கிறது என்று பார்ப்போமா..
இந்தப் படத்தில் என்ன இருக்கிறது என்றுதானே கேட்கிறீர்கள். சரி, கொஞ்சம் பெரிதாக்கிப் பார்க்கலாம். 
விண்வெளிக்குச் செல்லும் ராக்கெட் படத்தில் தெரிகிறதா...? அதன் அளவு எவ்வளவு பெரிதாக இருக்க வேண்டும் என்பதை அதன் அருகே இருக்கும் மனிதர்களுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்.

அடப் போங்கப்பு....! சும்மா கூராக இருப்பதெல்லாம் உங்களுக்கு ராக்கெட்டா என்று கேட்கத் தோன்றுகிறதா

சரி, அப்போ, இதையும் பாருங்கள்........! 
இந்தக் காலத்தில் இருக்கும் அனைத்து விதமான விமானங்களும் அடங்கிய ஓவியம் இது. தலையே சுற்றுகிறதா..?

இதற்கு மேலேயும் சொன்னால் தாங்கமுடியாமல் போகலாம். எனவே அடுத்த தொடரில் சந்திப்போம்
 பாகம்: 5
 
நான் இந்தத் தொடரை, மாயா இனத்தவர் சொல்லியபடி, '2012 இல் உலகம் அழியுமா? இல்லையா?' என ஆராய்வதற்காகவே ஆரம்பித்தேன். ஆனால் மாயா பற்றி எதுவுமே சொல்லாமல், ஏதேதோ சொல்லிக் கொண்டு போகிறேன் என்று நீங்கள் நினைக்கலாம். மாயா இன மக்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் சொன்னதன் பேரில், உலகம் அழியும் என்று நாம் ஏன் நம்ப வேண்டும்? இந்தப் பயம் அறிவியலாளர்களிடையே கூட, இரண்டாகப் பிரிந்து விவாதிக்கும் அளவுக்குப் பெரிதாகியதன் காரணம் என்ன? அந்த அளவுக்கு இந்த மாயாக்கள் முக்கியமானவர்களா? என்ற கேள்விகளுக்கு நாம் பதில் தேடும்போது, உலகத்தில் நடைபெற்ற பல மர்மங்களையும் நாம் பார்த்தே ஆக வேண்டும்.

அத்துடன், நான்  குறிப்பிடும் சம்பவங்களும், படங்களும் அறிவியலுக்கு ஒத்து வராத, மூட நம்பிக்கைகளைச் சொல்லுவதாக நீங்கள் கருதலாம். ஆனால், உலகத்தில் பல விடுவிக்கப்படாத மர்ம முடிச்சுகள் எப்போதும் இருந்து கொண்டேதான் இருக்கின்றன. அவற்றிற்குக் காரணமாக, திடமான ஒரு முடிவை எம்மால் எடுக்க முடிவதில்லை. ஆனாலும், அந்த மர்மங்களை நாம் தெரிந்து கொள்வதில் தப்பு ஒன்றும் இல்லை. உலகத்தில் இப்படி எல்லாம் இருக்கின்றன என்பதே தெரியாமல் எம்மில் பலர் இருக்கிறோம். அதனால் அவற்றை முதலில் பார்த்துவிடுவோம். 

நவீன விஞ்ஞானம் இன்றிலிருந்து கிட்டத்தட்ட 400 ஆண்டுகளிலிருந்துதான் ஆரம்பித்தது. அது கடந்த 100 வருடங்களில் மிகவும் அசுரத்தனமான வேகத்தில் பிராயாணித்து, இன்று எல்லையில்லாமல் விரிவடைந்து காணப்படுகிறது. பல விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள், கண்டுபிடிக்கப்பட்டது இந்தக் காலப் பகுதிகளில்தான்.

தாமஸ் ஆல்வா எடிசன் (Thomas Alva Edison) என்னும் விஞ்ஞானி 1879ம் ஆண்டுகளில் மின் விளக்கைக் கண்டுபிடித்தார் என்று எமக்குத் தெரியும். அதைத்தான் உண்மையென்றும் நாம் இன்றுவரை நம்பியும்  வருகின்றோம். ஆனால், எகிப்தில் உள்ள டெண்டெரா (Temple of Hathor, Dendera) என்னுமிடத்தில்உள்ள நாலாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில் சுவர்களில் உள்ள சில சித்திரங்கள் எம்மை வாயடைக்கப் பண்ணியிருக்கின்றது (அந்தக் கோவிலின் படமே மேலே ஆரம்பத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது).

அந்தக் கோவிலின் சுவரில் என்ன சித்திரம் இருந்தது என்று பார்க்கலாமா?
இவற்றைப் பார்த்தவுடனேயே, இவை இரண்டும் மின் விளக்குகள் வடிவத்தில் இருக்கின்றன என்று நான் சொல்லாமலே உங்களுக்குப் புரிந்திருக்கும். அவற்றைச் சரியாகப் பாருங்கள். அந்த மின் விளக்குகளின் கீழ்ப்பகுதியில் உள்ள குமிழும், அதில் பொருத்தப்பட்டிருக்கும் நீண்ட இழையும் (wire), மின் விளக்கின் உள்ளே இருக்கும் எரியிழையும், எமக்கு வேறு எதையும் ஞாபகப்படுத்த முடியாது. அந்தச் சித்திரத்தை கொஞ்சம் பெரிதாகவும், அது இருக்கும் அந்தக் கோவிலின் சுவரையும் இந்தப் படங்களில் பாருங்கள்.
"என்ன விளையாடுகிறீர்களா? அது ஏதோ கத்தரிக்காய் போல ஒரு உருவத்தில் இருக்கிறது" என நீங்கள் அலறுவது புரிகிறது. கத்தரிக்காய் ஒரு மனிதன் பிடித்துக் கொள்ளும் அளவுக்குப் பெரிதாக இருக்காது. அத்துடன் எந்த ஒரு காயுக்கும் அடியில் உள்ள தண்டு இவ்வளவு நீளத்தில் இருக்காது. அத்துடன் அதன் நடுவே உள்ள மின்னிழை போன்ற அமைப்பும் வேறு எதிலும் இருப்பதாகத் தெரியவில்லை. 

இந்த ஒரு சித்திரத்தை வைத்து இப்படிப்பட்ட முடிவுக்கு நாம் வரமுடியாது என்பது நிஜம்தான். இது போன்ற பல அமைப்புகளுடன் கூடிய சித்திரங்கள் எகிப்து பிரமிட்களில் காணப்பட்டாலும், எல்லாவற்றையும் உங்களுக்குத் தந்து வெறுப்பேற்ற முடியாததாகையால், குறிப்பாக நான் தரும் இந்தப் படத்தைப் பாருங்கள். உங்கள் சந்தேகம் குறைவதற்கு சாத்தியம் அதிகமாகும்.
இந்தப் படத்தில் உள்ளவையும் மின்விளக்குகள்தானா? இல்லையா? என்கிற முடிவுக்கு நீங்கள் வருவதற்கு முன்னர், அவை வெளிச்சம் தந்தால் இப்படிக் காட்சியளிக்குமா என்னும் படத்தையும் தருகிறேன் பாருங்கள்.
'இவற்றை எல்லாம் எம்மால் நம்ப முடியாது. இவையெல்லாம் வேறு ஏதோ சித்திரங்கள்' என்று சொல்லி நானும், நீங்களும் இதிலிருந்து நகர்ந்து விடலாம். ஆனால் பாக்தாத் (Baghdad) நகரில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பொருள், 'இல்லை, இவை எல்லாம் மின்சாரம் சம்பந்தமானவையே' என்ற  முடிவுக்கு நாம் வரவேண்டிய சூழலில், எம்மை வைத்துவிட்டது.
கி.மு.250 காலங்களில் இந்தப் பொருள் வழக்கில் இருந்திருக்கிறது. அதைத் தற்சமயம் கண்டெடுத்த ஆராய்ச்சியாளர்களே அதைக் கண்டு கொஞ்சம் அசந்தது என்னமோ உண்மைதான். அந்தப் பொருள் என்ன தெரியுமா? பாட்டரிகள். 

"என்ன பாட்டரிகளா? கி.மு.250 வருடத்திலா?" என்றுதானே கேட்கிறீர்கள். நீங்களே பாருங்கள்.
எல்லாமே நாம் இப்போதான் கண்டுபிடித்தோம் என மார்தட்டும் எங்களுக்கு, இவையெல்லாம் மறைமுகமாக சாட்டையடிகளைக் கொடுக்கின்றன. இவை பற்றி பல மாற்றுக் கருத்துகள் இருந்தாலும், இவை எம்மை யோசிக்க வைக்கின்றன. உங்களையும் இப்போது யோசிக்க வைத்திருக்கும்.

சரி, இவையெல்லாம் உண்மையில் மின்சாரம் சம்பந்தமானவை என்றால், இந்த அறிவை அந்தப் பழமையான மக்கள் எப்படிப் பெற்றுக் கொண்டார்கள்? இந்த மாபெரும் கேள்வியுடன் நாம் எகிப்தைவிட்டு மாயனை நோக்கி நகரலாம்.

அதற்கு முன்னர் நீங்கள் வாழ்நாளில் நம்பவே முடியாத ஒரு வரலாற்று அடையாளம் ஒன்றை சுட்டிக் காட்டிவிட்டுச் செல்கிறேன். அதைப் பார்த்தால் என்ன சொல்வதென்றே தெரியாமல் இருந்து விடுவீர்கள். ஸ்பெயினில் கி.பி.1200 ஆண்டுகளில் கட்டப்பட்ட ஒரு சர்ச்சில் உள்ள சிலையின் இந்தப் படத்தைப் பாருங்கள். 
என்ன சரியாகத் தெரியாவிட்டால் கொஞ்சம் பெரிதாகப் பார்க்கலாம்.
நவீன விண்வெளி மனிதன் ஒருவன், அதே உடைகள், காலணிகள், தலையணிகளுடன் கி.பி.1200 ஆண்டில் கட்டப்பட்ட சர்ச்சில் இருப்பது ஆச்சரியத்தின் உச்சமல்லவா

இந்தச் சிலை எப்படி அந்தச் சர்ச்சில் வந்திருக்கலாம் என்ற கேள்வியை யோசித்தபடியே அடுத்த வாரம்வரை காத்திருங்கள்.

இதற்கான விடையையும், மாயன்களைப் பற்றியும் அடுத்த தொடரில் பார்க்கலாம்
 பாகம்: 6

எப்பொழுதும் விழிப்புணர்வு என்பது எமக்கு மிக அவசியமானது. நாம் எல்லாவற்றையும் நம்புகிறோம். எல்லாரையும் நம்புகிறோம். அரசியல்வாதியாக இருந்தாலென்ன, மதவாதியாக இருந்தாலென்ன, எழுத்தாளனாயிருந்தாலென்ன, எல்லாரையும் சுலபமாக நம்பிவிடுகிறோம். எமது இந்த நம்பிக்கையையே பலகீனமாகக் கொண்டு, தப்பான கருத்துகளை எம்முள் விதைப்பதற்கு ஒரு கூட்டமே எம்முன்னே காத்திருக்கிறதுஅதனால்தான், அடிப்படையில் குறைந்தபட்சமாவது சிந்திக்க வேண்டும் என்று சொல்கிறது அறிவியல்பல விசயங்களுக்கு விடைகள் இல்லாதபோதும், தர்க்க ரீதியான முடிவுகளை எடுக்க, அறிவியல் எம்மை வற்புறுத்துகிறது. ஆதாரமில்லாத எதையும் அறிவியல் அப்படியே ஏற்றுக் கொண்டு விடுவதில்லை.

ஒன்றைச் சரியாகக் கணிப்பது என்றால் என்ன? தர்க்க ரீதியாக சிந்திப்பது என்றால் என்ன? என்பது பலருக்குத் தெரிவதில்லை. பரீட்சைகளில் வரும் வினாத்தாள்களில் ஒரு வினாவுக்கு நான்கு பதில்கள் கொடுத்திருப்பார்கள் அல்லவா? அதில் சரியான விடையைத் தெரிந்தெடுப்பது சரியான கணிப்பு.  அதே நேரத்தில் சரியான விடை எதுவென எமக்குத் தெரியாத பட்சத்தில், தப்பான பதில்கள் எவையாயிருக்கும் எனச் சிந்தித்து, அவற்றை நீக்குவதன் மூலம் சரியான விடையைக் கண்டுபிடிப்பதுதான்  தர்க்க ரீதியாக முடிவெடுப்பது என்பது.

ஓவியத்தில் நாம் கோடுகளையும், நிறங்களையும் படிப்படியாக, சேர்த்துச் சேர்த்து முழு ஓவியத்தைப் படைக்கின்றோம். ஆனால் சிலையில், அதைச் செய்யும் கல்லில் இருந்து தேவையற்ற பாகங்களை படிப்படியாக நீக்கி, முழுச் சிலையையும் வடிக்கிறோம். ஒன்று சேர்த்தல், மற்றது நீக்கல். இரண்டும் இறுதியில் முழுமையான படைப்பாய் மாறுகின்றன.

ஒரு  விண்வெளி மனிதன்  கிருஸ்தவத் தேவாலயத்தில் சிலை வடிவமாக இருக்கும் படங்களைக் கடந்த பதிவில் தந்தது ஞாபகம் இருக்கலாம். அந்தக் கிருஸ்தவ தேவாலயம் ஸ்பெயின் நாட்டில் உள்ள 'சலமன்கா' (Salamanca) என்னும் ஊரில் இருக்கிறது. அந்தத் தேவாலயம் கட்டப்பட்டது எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னர். அதாவது கி.பி.1200 களில் கட்டப்பட்டது. அதில் எப்படி ஒரு நாசா விண்வெளிப் பயணியின் உருவம் வரமுடியும்? அதற்குச் சாத்தியம் உண்டா? எனச் சிந்தித்தால், சாத்தியமே இல்லை எனத்தான் சொல்ல வேண்டும். அந்த உருவத்தில் இருக்கும் காலணி முதல் ஜாக்கெட் வரை எல்லாமே, தத்ரூபமாக இன்றைய நவீன விண்வெளிப் பயணி போல இருப்பது என்னவோ நெருடலான விசயம். மாயாக்களோ அல்லது எகிப்திய பிரமிட்களோ இப்படிச் சித்திரங்களைக் கொடுத்தாலும், இவ்வளவு தத்ரூபமாக கொடுக்கவில்லை.
ஆராய்ந்து பார்த்ததில் அந்த சிலை உண்மையாக 800 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்டதில்லை எனத் தெரிய வந்தது. இந்த தேவாலயம் 1992ம் ஆண்டு  திருத்தியமைக்கப்பட்ட போது, இந்த விண்வெளிப் பயணியின் சிலை ஒரு போத்துக்கேய சிற்பியால் சேர்க்கப்பட்டிருக்கிறது. எனவே அது உண்மையாக 800 வருடப் பழமை வாய்ந்ததல்ல. 

இதுவரை மாயாக்கள் வாழ்ந்த இடத்தில் இல்லாமல் வேறு இடங்களில் சுற்றித் திரிந்த நாம் இனி அவர்கள் வாழ்ந்த இடத்துக்குச் செல்வது நல்லது. இனி தொடர்ச்சியாக மாயாக்களின் மர்மங்களுக்குள் நாம் பிரயாணம் செய்யலாம் வாருங்கள்........!

மாயன் இனத்தவர்கள் பற்றிச் சொல்லும்போது, ஆரம்பமே மாயனின்  அதி உச்சக்கட்ட மர்மத்துடன் ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன். அதனால் நீங்கள் அவற்றிற்கு உங்களைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். 'என்னடா, இந்த நபர் இவ்வளவு பில்டப் கொடுக்கிறாரே' என்று நினைக்கலாம். நான் சொல்லப் போகும் விசயம், மாயன் இனத்தின் சரித்திரத்தின் மைல் கல்லாக அமைந்த ஒன்று. உங்களை அதிர வைக்கப் போகும் விசயமும் இதுதான். உலகில் உள்ள ஆராய்ச்சியாளர்களும், அறிவியலாளர்களும் இதுவரை உலகத்தில் நடைபெற்ற அனைத்து மர்மங்களின் முடிச்சுகளையும் தங்களால் இயன்ற அளவிற்கு அவிழ்த்துக் கொண்டே சென்றிருக்கின்றனர். ஆனால் அவர்கள் கூடத் தோற்ற ஒரு இடம் உண்டென்றால், அது இப்போது நான் சொல்லப் போகும் விசயத்தில்தான்

அப்படி என்னதான் அந்த விசயம் என்று நினைக்கிறீர்கள் அல்லவா? சொல்கிறேன்......!

மாயன் இனத்தவர் வாழ்ந்த பகுதியில் ஆராய்ச்சிக்கென வந்தவர் ஒருவரின் கண்ணில் தற்செயலாகத் தடுப்பட்ட பொருளொன்று, அதைக் கண்டெடுத்தவரை மலைக்க வைத்தது.  
அந்தப் பொருள் ஒரு மண்டை ஓடு…….!

"அடச் சே…..! ஒரு மண்டை ஓட்டுக்கா இவ்வளவு பில்டப் கொடுத்தாய்?" என்றுதானே கேட்கிறீர்கள். கொஞ்சம் பொறுங்கள். முழுவதும் சொல்லிவிடுகிறேன். ஒரு சாதாரண மண்டை ஓட்டுக்காகவா நான் இவ்வளவு பேசுவேன்.

அது ஒரு சாதாரன மண்டை ஓடே அல்ல......! அது ஒரு 'கிறிஸ்டல்' மண்டை ஓடு.

ஆம்! 'கிறிஸ்டல்' (Crystal) என்று சொல்லப்படும் மிகவும் பலம் வாய்ந்த கண்ணாடி போன்ற ஒரு முலப் பொருளினால் உருவாக்கப்பட்ட மண்டை ஓடு அது. 

இது பற்றி மேலும் சொல்ல வேண்டும் என்றால் 'கிறிஸ்டல்' என்பது பற்றி நான் முதலில் கொஞ்சம் விளக்கிச் சொல்ல வேண்டும். கிறிஸ்டல் என்பது சாதாரண கண்ணாடியை விட வலிமை வாய்ந்த, கடினமான ஒரு மூலப் பொருள். கண்ணாடியிலும் கிறிஸ்டல் உருவாக்கப்படும் என்றாலும், 'குவார்ட்ஸ்' (Quartz) போன்ற பலம் வாய்ந்த மூலப் பொருள்களினாலும் அது அதிகம் உருவாக்கப்படுகிறது. இந்த வகைக் கிறிஸ்டலை வெட்டுவது என்பது, இன்றைய காலத்திலேயே, மிகக் கடினமானது. வைரம் போன்றவறால்தான் அதை வெட்ட முடியும். அல்லது நவீன 'லேசர்' (Laser) தொழில் நுட்பத்தினால் வெட்டலாம்.
சரி, மீண்டும் எங்கள் கிறிஸ்டல் மண்டையோட்டுக்கு வருவோமா!

'மிச்செல் ஹெட்ஜஸ்' (Mitchell-Hedges) என்பவர் 1940 களில் மிகவும் பிரபலமான ஒரு புதைபொருள் ஆராய்ச்சியாளராக இருந்தவர். அவரது வளர்ப்பு மகளின் பெயர் அன்னா ஹெட்ஜெஸ் (Anna Hedges).  1924ம் ஆண்டு மிச்செல், மாயா இனத்தவர் வாழ்ந்த இடங்களை ஆராய்வதற்காக, லுபாண்டூன் (Lubaantun) என்னுமிடத்தில் அமைந்த மாயன் கோவிலுக்குச் சென்றார் (தற்போது பெலிட்ஸே (Belize) என்னும் நாடாக அது காணப்படுகிறது). அங்கே ஒரு பிரமிட்டின் அருகே அன்னாவின் காலடியில் இந்தக் கிறிஸ்டல் மண்டை ஓடு தட்டுப்பட்டது. அப்போது அன்னாவுக்கு வயது பதினேழு.  

அன்னாவினால் கண்டெடுக்கப்பட்ட அந்த மண்டை ஓடுதான் இது……!
அன்னாவால் கண்டெடுக்கப்பட்ட இந்தக் கிறிஸ்டல் மண்டை ஓடு எத்தனை வருசம் பழமையானது தெரியுமா…? 5000  வருசங்களுக்கு மேல். அதாவது மாயன் இனத்தவர் வாழ்ந்த காலங்களுக்கு முந்தையது இந்த மண்டை ஓடு.  இந்தக் கிறிஸ்டல் மண்டை ஓடு மிக அழுத்தமாக, அழகாக, வட்டவடிவமாக தேய்க்கப்பட்டு, பளபளப்பாக செதுக்கப் பட்டிருக்கிறது. அன்றைய காலத்தில், ஒரு மாயன் ஒரு நாள் முழுவதும் இந்த மண்டை ஓட்டைச் செதுக்க ஆரம்பித்திருந்தால், அவனுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலே இந்த மண்டை ஓட்டைச் செதுக்கி முடிக்க எடுத்திருக்கும். அவ்வளவு துல்லியமாக செதுக்கப்பட்டிருந்தது அந்த மண்டை ஓடு. 
இந்த மண்டை ஓட்டை ஆராய்ந்த 'ஹூவ்லெட் பக்கார்ட்' (Hewlett Packard) நிறுவனத்தினர், குவார்ட்ஸ் (Quartz) வகைக் கிறிஸ்டலினால் இந்த மண்டை ஓடு செய்யப்பட்டிருப்பதாகவும், நுண்ணிய மைக்ரோஸ்கோப்களினாலேயே கண்டுபிடிக்க  முடியாதபடிஅது எப்படிச் செய்யப்பட்டது, எந்த ஆயுதத்தினால் செய்யப்பட்டது  என்று திணறும் அளவுக்கு, மிக நேர்த்தியாக செய்யப்பட்டும் இருக்கிறது என்று அறிக்கை கொடுத்தனர்.  

எந்த ஒரு கருவியும் கண்டு பிடிக்கப்படாத காலத்தில், அவ்வளவு வலிமையான ஒரு பதார்த்தத்தால் ஒரு மண்டை எப்படி உருவாக்கி இருப்பார்கள் மாயன்கள்? இது சாத்தியமான ஒன்றுதானா? இந்த மண்டை ஓட்டை ஆராய்ந்தவர்கள் சிலர், இது லேசர் தொழில்நுட்ப முறையினால்தான் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்கிறார்கள். காரணம் அதை உருவாக்கிய அடையாளம் அதில் எப்படிப் பபார்த்தாலும் தெரியவில்லலை. லேசர் தொழில் நுட்பம் 5000 ஆண்டுக்கு முன்னால் இருந்தது என்றால் நீங்களே சிரிப்பீர்கள். அப்படி என்றால் இது எப்படி? இன்றுள்ள மனிதனால் கூட, நவீன கருவிகள் இல்லாமல்  இப்படி ஒரு மண்டை ஓட்டைச் சாதாரணமாக உருவாக்க முடியாது.

இந்தக் கிறிஸ்டல் மண்டை ஓடுகள் பற்றிய செய்தி இவ்வளவுதானா என்று கேட்டால், நான் சொல்லும் பதிலால் நீங்கள் அதிர்ந்தே போய் விடுவீர்கள். அவ்வளவு மர்மங்களை அடக்கிருக்கிறது இந்தக் கிறிஸ்டல் மண்டை ஓடு. இந்தக் கிறிஸ்டல் மண்டை ஓடு கிடைத்ததற்கு அப்புறம், மாயன் சரித்திரத்தை இந்தத் திசையில் ஆராய்ந்தால் கொட்டுகிற செய்திகள் அனைத்துமே நாம் சிந்திக்க முடியாதவையாக இருக்கின்றன. இது பற்றி மேலும் சொல்வது என்றால் சொல்லிக் கொண்டே போகலாம் என்னும் அளவுக்கு மிகப்பெரிய செய்திகளை அடக்கியது இந்த மண்டை ஓடு.   

இந்தக் கிறிஸ்டல் மண்டை ஓட்டை அடிப்படையாக வைத்து, 2008ம் ஆண்டு 'இன்டியானா ஜோன்ஸ் அன்ட் கிங்டொம் ஆஃப் கிறிஸ்டல் ஸ்கல்' (Indiana Jones and the Kingdom of the Crystal Skull) என்னும் படம் வெளியானது. இந்தப் படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஹரிசன் போர்ட் (Harrision Ford) நடித்திருக்கிறார். அத்துடன் இந்தப் படத்தை இயக்கியவர் பிரபல இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (Steven Spielberg).
முடிந்தால் இந்தப் படத்தைப் பாருங்கள். இந்தப் படத்தில் வரும் பாத்திரம் என்பது உண்மையாகவே இருந்த ஒரு பாத்திரம். அவர்தான் மேலே நான் சொல்லிய மிச்செல் ஹெட்ஜெஸ்.
இவ்வளவு ஆச்சரியம் வாய்ந்த மண்டை ஓடு மாயாக்களால் எப்படிச் சாத்தியமானது….?

குவார்ட்ஸ் என்னும் கனிமத்தை எப்படி மாயாக்கள் எடுத்தார்கள்…..?

அதை எப்படி மண்டை ஓடு போலச் செதுக்கினார்கள்…..?

மாயாக்கள் என்ன, மனிதனாலேயே சாத்தியமில்லாத ஒன்றல்லவா இது!

அப்படிப்பட்ட மண்டை ஓடு ஒன்றே ஒன்றுதானா....?

இப்படிப்பட்ட கேள்விகளுக்கு நடுவில், அன்னாவின் கிறிஸ்டல் மண்டை ஓட்டின் பின்னர், பலர் ஆராய்ச்சிக்குக் கிளம்பினார்கள். மேலதிக ஆராய்ச்சிகளுக்குப் பின்னர் இது போன்ற மண்டை ஓடுகள் வெவ்வேறு இடங்களில் இருப்பது தெரிந்தது. மொத்தமாக எட்டு கிரிஸ்டல் மண்டை ஓடுகள் அடுத்தடுத்துக் கண்டுபிடிக்கப்பட்டன. 

 அந்த எட்டு மண்டையோடுகளில் பெரும்பான்மையானவை, குவார்ட்ஸ் என்னும் கனிமத்தினாலும், சில 'அமெதிஸ்ட்' (Amethyst) என்னும் ஆபரணங்கள் செய்யும் ஒரு வகை இரத்தினக் கல்லாலும் செய்யப்பட்டவையுமாகும்

அப்படிக் கண்டுபிடிக்கப்பட்ட எட்டு கிறிஸ்டல் மண்டை ஓடுகளும் இவைதான்.
மேலும் மாயன் சரித்திரங்களை ஆராய்ந்தபோது, இப்படிப்பட்ட மண்டை ஓடுகள் மொத்தமாக பதின்மூன்று இருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் அறிந்து கொண்டார்கள். அப்படி என்றால் இந்தப் பதின்மூன்று மண்டை ஓடுகள் இருப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறதா? அப்படி இருந்தால், அந்தக் காரணம் என்ன….? மிகுதி ஐந்து மண்டை ஓடுகளும் எங்கே போயின? அவை கிடைத்தால் எமக்கு ஏதாவது நன்மைகள் உண்டா?

இந்தக் கேள்விகளின் பதில்களோடும், மேலும் பல மர்மங்களோடும் அடுத்த தொடரில் சந்திக்கலாம்.
 
பாகம்: 7
மாயன்களின் கல்வெட்டுகளை ஆராய்ந்து பார்த்ததில், மொத்தமாக பதின்மூன்று கிறிஸ்டல் மண்டையோடுகள் இருக்க வேண்டும் என்ற குறிப்புகள் கிடைத்தன. பதின்மூன்று மண்டைகள் ஏன் என்பதற்கான விளக்கத்தையும் ஆராய்ந்தவர்கள் ஓரளவுக்குப் புரிந்துகொண்டனர். அந்தக் காரணம்  என்ன என்று சொல்வதற்கு முன்னர், உங்களை வேறு ஒரு தளத்துக்கு அழைத்துச் சென்று, அங்கு  நடந்த சம்பவங்களை விளக்கிவிட்டுமீண்டும் மண்டையோட்டுக்கு வருகிறேன்.

இந்தப் பூமியில் வாழும் மக்கள் அனைவரும் பகுத்தறிவுவாதிகள், பகுத்தறிவுவாதி அல்லாதவர்கள் என்னும் இரண்டு வகையாகப் பிரிந்தே வாழ்கிறார்கள்இங்கு பகுத்தறிவு என்று நான் சொல்வது நாத்திகத்தை அல்ல. பலர் பகுத்தறிவையும், நாத்திகத்தையும் ஒன்றாக்கித் தமக்குள் குழப்பிக் கொண்டிருக்கின்றனர்.  பகுத்தறிவின் ஒரு அங்கமாகத்தான் நாத்திகம் இருக்கிறது. ஒரு பகுத்தறிவுவாதி, நாத்திகராக இருப்பார். ஆனால் ஒரு நாத்திகர் பகுத்தறிவுவாதியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.  பகுத்தறிவு என்பது கடவுள் மறுப்பையும் தாண்டி, பல மூடநம்பிக்கைகளையும் மறுக்கிறது. 

பகுத்தறிவுவாதி, பகுத்தறிவுவாதி அல்லாதவர் ஆகிய இருவரும், ஒருவரை ஒருவர் பார்க்கும்போது, அடுத்தவரை ஏளனமாகத்தான் பார்க்கின்றனர். தான் நினைப்பது மட்டும்தான் சரி என்னும் நினைப்பால் இருவருமே அடுத்தவனை அலட்சியப் படுத்துகின்றனர்.  தவறாக மதிப்பிடுகின்றனர். ஆனால் கோட்பாட்டு ரீதியில், இந்த இரண்டுவிதமான மனிதர்களுக்குமிடையில், நூலிழை போல இன்னும் ஒன்றும் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. அதுதான் 'மிஸ்டரி' (Mystery) என்று சொல்லப்படும் 'விடை தெரியா விந்தைகள்'. விடை தெரியாத பல விந்தைகள் இன்னும் உலகில் உள்ளன. ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளுக்கான விடையின்றி, காரணங்களே தெரியாமல் பல விசயங்களும், மர்மங்களும் எம்மிடையே இருந்து வருகின்றன.

இன்று எமக்கு இருக்கும் நவீன அறிவை வைத்துக் கொண்டும் கூட, அவற்றின் காரணங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. காரணங்கள் தெரியப்படுத்தப்படாத காரியங்களை அறிவியல் முழுமையான உண்மையாக ஏற்றுக் கொள்வது இல்லை. ஆகவே அந்தக் காரணங்கள் கண்டுபிடிக்கப்படும் வரை, அதை மிஸ்டரி என்னும் ஒன்றுக்குள் அடக்கி, அதன் விளக்கத்தை அறிவியல் ஆராய்ந்து கொண்டே இருக்கும்.

ஆனாலும் எமது அறிவியலின் ஆராய்ச்சித் தன்மைக்கும் ஒரு எல்லை உண்டல்லவா? ஒரு குறித்த அளவுக்கு மேல், பலவற்றை அதனால் ஆராய முடியாமல் போய் விடுகிறது. அவற்றிற்கான விளக்கத்தை அறிவியல் கொடுக்காத பட்சத்தில், மக்களே அதற்கான பல விளக்கங்களை, கட்டுக் கதைகளாகக் கட்டிவிடத் தொடங்கிவிடுவார்கள். இதனால் மிஞ்சுவது குழப்பம் மட்டும்தான். எனவே, பல விந்தைக்குரிய விசயங்கள் மக்களைச் சென்று அடைவதற்கு முன்னரே, அரசுகளால் மறைத்து வைக்கப்படுகின்றது.

இப்படி மறைத்து வைத்து, அவற்றைத் தொடர்ச்சியாக ஆராய்வதற்கென்றே, அமெரிக்காவில் ஏரியா 51' (Area 51) என்ற ஒரு இடத்தை மிகப் பாதுகாப்பாக அமைத்து வைத்திருக்கிறார்கள்.
மேலே இருப்பது சாட்டிலைட் மூலமாக 'ஏரியா 51' இன் காட்சிப் படம். இந்த 'ஏரியா 51’ அமெரிக்காவில் உள்ள நிவாடாவில் (Nevada) அமைந்திருக்கிறது. குறிப்பாக ஏரியா 51 இல் பறக்கும் தட்டுகள் (Flying saucer), வேற்றுக் கிரகவாசிகள் (Alien) ஆகியவற்றை ஆராய்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இதன் உச்சக்கட்டமாக, விண்வெளியில் இருந்து வந்த ஒரு பறக்கும் தட்டையும், விண்வெளி உயிரினம் ஒன்றையும் ஏரியா 51இல் மறைத்து வைத்திருக்கிறார்கள் என்னும் வதந்தி பலமாகவே இருக்கிறது. ஆனால் அங்கிருந்து இரகசியமாக கசிந்து வெளிவரும் தகவல்களும், படங்களும் அவை வதந்திதானா என்றே எம்மைச் சந்தேகப்பட வைக்கிறது
ஏரியா 51 இல் எடுத்த இந்தப் படத்தில் வட்டமாக இருப்பது ஏதோ கட்டடம் என்று நினைத்தால் நீங்கள் ஏமாந்துதான் போவீர்கள். அதை நன்றாகப் பாருங்கள். அது பறக்கும் தட்டு போல இருக்கிறதா? இந்தப் படம் மட்டுமில்லை,  'அலன் லூயிஸ்' (Alen Lewis) என்பரால் வெளிக்கொண்டு வரப்பட்ட இன்னுமொரு படமும், எம்மை அதிர வைக்கும் தன்மையை உடையது. 
தன்னுடைய அப்பா ஏரியா 51இல் வேலை செய்ததை அறியாத ஒரு மகன் அவர் இறந்ததும் கண்டெடுத்த படத்துடன் அவர் கொடுத்த குறிப்பு இது. 

"Recently, my father passed away and while i always thought that he worked in the BLACK OPS ARENA i never thought that he had anything to do with aliens certainly, he never mentioned it. While cleaning out his house, i ran across the attached photo, if you look in the bottom right hand corned of the container there is an AREA 51 badge..."

இந்தப் படத்தை எப்படி எடுப்பது? இது பற்றி என்ன சொல்வது

இவற்றையெல்லாம் நம்புவதோ அல்லது வதந்தி என ஒதுக்குவதோ எங்கள் பிரச்சினை என்றாலும், இது உண்மையாக இருந்தால் என்னும் கேள்வி, காட்டமான விளைவையே உருவாக்கக் கூடியது.  இந்த ஏரியா 51 , 'இன்டிபென்டன்ஸ் டே' (Independence Day) என்னும் 'வில் ஸ்மித்' (Will Smith) நடித்த படத்தில் விபரமாகவே காட்டியிருக்கிறார்கள். இந்தப் படத்தின் அடிப்படைக் கருவே நான் மேலே சொன்னதுதான்.
இங்கு நான் ஏலியன்கள் எம்முடைய பூமிக்கு வந்திருக்கிறார்களா என்று ஏன் ஆராய வேண்டும்? ஏரியா 51 போன்றவற்றையெல்லாம் ஏன் மாயாவை ஆராயும் இடத்தில் சொல்ல வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம். சரியாக யோசித்தால், மாயன்களின் அனைத்து நடவடிக்கைகளும், ஏதோ ஒரு விதத்தில் விண்ணையும், விண்வெளியின் வேற்றுக் கிரகவாசிகளையும் நோக்கியதாகவே அமைகின்றன. அவற்றிற்கெல்லாம் உச்சக்கட்டமாய் அமைந்த கிறிஸ்டல் மண்டையோடு கூட, மாயன்களுக்கு ஏலியன்கள் மூலம்தான் கிடைக்கப்பெற்றிருக்கின்றன என்ற முடிவுக்குத்தான் கொண்டு செல்கிறது.  விண்ணிலிருந்து ஏலியன்கள் வந்ததற்கு சாட்சியாக 'ஏரியா 51' உள்ள படம் இருக்கலாம் என்றாலும், அது மட்டுமே சாட்சியாக இருந்துவிட முடியாது. ஆகவே இதை மேலும் ஆராய்ந்து பார்க்கலாம்.  
இப்பொழுது நான் சொல்லப் போகும் இந்தச் சம்பவத்துக்கும்மாயாவுக்கும் எந்தவிதமான சம்பந்தம் இல்லை என்று நினைத்தாலும், சம்பந்தம் உண்டு என இப்போது பல ஆராய்ச்சியாளர்கள் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். சந்திரனை ஆராயச் சென்ற அப்போலோ விண்கலத்தின் ஆராய்ச்சியாளர்கள் எடுத்த இந்தப் படத்தை முதலில் பாருங்கள்.

இதில் ஏதாவது வித்தியாசமாகத் தெரிகிறதா.....….?
கொஞ்சம் பெரிதாக்கிய இந்தப் படத்தைப் பாருங்கள். இப்போது ஏதாவது தெரிகிறதா….? 
மண்டையொடு தெரிகிறதல்லவா? ஆம், அது மண்டையோடேதான். மனிதனே வாழ முடியாத சூழ்நிலை இருக்கும் சந்திரனில். இதில் ஆசரியம் என்னவென்றால் அது ஒரு கிறிஸ்டல் மண்டையோடு. இது எப்படிச் சாத்தியம்? யாரால் இதற்குப் பதில் சொல்ல முடியும்?

அந்த மண்டை ஓட்டை அப்போலோ விண்கலத்தில் சென்றவர்கள், கூடவே எடுத்தும் வந்திருக்கிறார்கள். அது இப்போ ஏரியா 51 இல் இருக்கிறது. இப்படி ஒரு மண்டையோடு சந்திரனில் எடுக்கப்பட்டதாக மக்களுக்குச் சொல்லப்படவேயில்லை. காரணம், பதிலே சொல்ல முடியாத மர்மமாக அது இருப்பதால். இப்படி ஒரு மண்டையோடு ஒன்று சந்திரனில் இருந்தது என்று உலக மக்கள் தெரிந்து கொண்டால், இதுவரை மக்கள் நம்பிய அனைத்து நம்பிக்கைகளும், மதக் கோட்பாடுகளும் அடிபட்டுப் போய்விடும். அதனால் உலகின் சமநிலையே குலைந்து விடும் சூழ்நிலை உருவாகும். இது போன்ற  காரனங்களினால், அதை மறைத்து விட்டனர். அப்படி மறைக்கப்பட்டவை உலகில் பல உண்டு.

உலகின் சமநிலை குலைந்து விடக் கூடாது என்பது மட்டுமில்லை மறைக்கப் பட்டதற்குக் காரணம். விஞ்ஞான வளர்ச்சியால் கண்டுபிடிக்கப்படும் எதையும், இதுவரை மதங்களின் உச்சக் கட்டமைப்புகள் எதிர்த்தே வந்திருக்கின்றன. காரணம், மதங்களின் வேதப் புத்தகங்களில் சொல்லப்பட்டவைக்கு மாற்றாக அவை அமைந்திருப்பதுதான். உலகில் உள்ள பல அரசுகள் மதங்களின் கட்டுப்பாடுகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் இன்றும் இருக்கின்றன. 

சந்திரனில் மண்டை ஓடு இருப்பதற்கான சாத்தியங்கள் என்னவாக இருக்கும் என்று சிந்தித்துக் கொண்டிருக்கும் போதுதான் வந்து சேர்ந்தது அடுத்த ஒரு படம். செவ்வாய்க் கிரகத்தைச் (Mars) சுற்றி அமெரிக்கா அனுப்பிய விண்கலம்  எடுத்த படங்களில், வித்தியாசமான உருவங்கள் காணப்பட்டன. அந்தப் படங்களில் மனிதத் தலை போன்ற பெரிதாக அமைப்புகள் காணப்படுகின்றன.
அது மட்டுமல்ல,  மண்டை ஓடுகள் போன்றவைகளும் நிலத்தில் காணப்படுகின்றன. செவ்வாய் கிரகத்தின் மனிதத் தலை வடிவில் இருக்கும் இது என்ன?
இந்தப் படம் அந்தச் சமயத்திலேயே வெளி வந்திருந்தது. ஆனால் பலர் அதை ஒரு தற்செயல் நிகழ்வெனப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இப்போது இணைய வலையமைப்பின் மூலம் உலகமே ஒன்றாக இணைந்துவிட்ட நிலையில், பல இரகசியங்களை சம்பந்தப்பட்டவர்கள் கசிய விடத் தொடங்கிவிட்டனர். அதனால் கிடைக்கும் தகவல்கள் மூலம் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து இப்போது நம்மால் பார்க்க முடிகிறது.

செவ்வாயில் மனித முகம், சந்திரனில் மனித மண்டை ஓடு, மாயாவில் கிறிஸ்டல் மண்டை ஓடுகள். இவற்றை இப்போது இணைத்துப் பார்க்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். அதனால் அவர்கள் சில முடிவுகளுக்கு வந்தனர். அவர்கள் வந்த முடிவுகள்தான் இவை.......!

'பால் வெளி மண்டலம்' எனச் சொல்லப்படும் 'மில்க்கி வேயில்' (Milky Way) அதியுயர் தொழில் நுட்ப அறிவுடன், மனித வடிவில் வேற்றுக் கிரகவாசிகள் வாழ்கின்றனர். அவர்கள் செவ்வாயில் தங்கள் தளங்களை அமைத்து பூமியை ஆராய்ந்து வந்திருக்கின்றனர். செவ்வாயில் ஏற்பட்ட விண்கல் தாக்குதலினால் அங்கிருந்து கிளம்பி தற்காலிகமாக சந்திரனில் தங்கியிருந்திருக்கின்றனர். இதனால்தான் செவ்வாயிலும், சந்திரனிலும் மண்டை ஓட்டு வடிவங்கள் கிடைக்கச் சாத்தியங்கள் இருந்தன. இந்தச் சமயங்களிலேயே விண்வெளி மனிதர்கள் பூமிக்கு வந்து வந்து போயிருக்கிறார்கள். அவர்கள் வந்து போன இடங்களில் ஒன்றுதான் மாயன் இனத்தவர்கள் வாழ்ந்த இடம். இவர்களே மாயன்களுக்கு கணிதம், வாணியல், கட்டடக் கலை, விவசாயம், வரைகலை ஆகியவற்றைக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். இந்த அடிப்படையில்தான் நான் கடந்த பதிவில் சொல்லியிருந்த 'இண்டியானா ஜோன்ஸ்' படம் எடுத்திருக்கிறார்கள்.

இண்டியானா ஜோன்ஸ்திரைப் படத்திற்கு ஜனரஞ்சகம் தேவை என, திரைப்பட உத்திக்காக மிகைப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தாலும், அதன் அடிப்படைக் கரு என்பது தற்போதைய ஆராய்ச்சியாளர்கள் பலரது முடிவுகளாகவே இருக்கின்றது. இப்படி முடிவுகளை மற்றவர்கள் போல ஆராய்ச்சியாளர்கள் எழுந்தமானமாக எடுத்துவிட முடியாது. அப்படி எடுத்தால்ஏன் எடுத்தார்கள் என்பதற்கான காரணங்களையும் அவர்கள் சொல்ல வேண்டும்.

இந்த முடிவை அவர்கள் எடுத்ததற்கான காரணங்களையும், ஆதாரங்களையும் அடுக்கடுக்காகச் சொல்லிக் கொண்டே போனார்கள். அதில் முதன்மையாக அவர்கள் வைத்த ஆதாரம்தான் 'நாஸ்கா லைன்ஸ்' (Nazca Lines). 

நாஸ்கா கோடுகள் என்பவை பற்றி நீங்கள் அறிந்தால், இப்படியும் உலகத்தில் இருக்கிறதா? என்று ஆச்சரியப்படுவீர்கள். தமிழர்கள் பலர் அறியாத ஒன்று அது. 

அது என்ன நாஸ்கா லைன்ஸ்? அதை அடுத்த பதிவில் பார்ப்போமா.....!
 பாகம்: 8

ஏலியன்கள் பூமிக்கு வந்திருக்கிறார்களா? இல்லையா? என்னும் இரண்டு விதமான கருத்துகளில் ஆய்வாளர்கள் தம்மை ஈடுபடுத்திக் கொண்டாலும், அப்படி யாரும் பூமிக்கு வரவில்லை என்பதை மையமாக வைத்தே நாம் அனைவரும் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆதாரமில்லாமல் எதையும் ஒத்துக் கொள்ளாத அறிவியல், இதையும் ஏற்றுக் கொள்ளவில்லை. பூமிக்கு ஏலியன்கள் வரவில்லை என்றுதான் அறிவியல் சொல்லிக் கொண்டிருக்கிறதே ஒழிய, ஏலியன்களே பிரபஞ்சத்தில் இல்லை என்று சொல்லவில்லை. கலிபோர்னியா மாநிலத்தில், 42 அதியுயர் சக்திவாய்ந்த டெலஸ்கோப்கள் அமைக்கப்பட்டு, 'பிரபஞ்சத்தில் எங்காவது உயிரினங்கள் இருக்கின்றனவா? அவை பேசும் குரல்கள் எமக்குக் கேட்குமா?' எனத் தினம் தினம் ஆராய்ந்துகொண்டே இருக்கின்றனர். இதற்கென பல மில்லியன் டாலர் செலவும் செய்யப்பட்டிருக்கிறது. இந்தச் செலவைப் பொறுப்பேற்றுக் கொண்டவர் வேறு யாருமில்லை. உங்கள் எல்லாருக்குமே தெரிந்த மைக்ரோசாப்ட்டின் இணை இயக்குனரான பவுல் அலென் (Paul Allen) தான் அவர். இதனாலேயே இந்த திட்டம் 'அலென் டெலெஸ்கோப் அர்ரே (Allen Telescope Array) என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஆனால் பூமிக்கு ஏலியன்கள் வந்திருக்கின்றனர் என்று அடித்துச் சொல்லும் ஆய்வாளர்கள் பெரும்பாலும் சுட்டிக் காட்டுவது, 'நாஸ்கா லைன்ஸ்' (Nazca Liines) என்பதைத்தான். தமிழில் அதை நாஸ்கா கோடுகள் என்று சொல்வோமா

அது என்ன நாஸ்கா கோடுகள்இது பற்றி கொஞ்சம் பார்க்கலாம்………..!

தென்னமெரிக்காவில் இருக்கும் பெரு (Peru) நாட்டில் உள்ள நாஸ்கா (Nazca) என்னுமிடத்தில் அமைந்த, பெருவெளிகளில் வரையப்பட்டிருக்கும் சித்திரங்களும், கோடுகளும்தான் நாஸ்கா கோடுகள் என்று சொல்லப்படுகின்றன. கோடுகள், சித்திரங்கள் என்றதும் ஏதோ சுவரில் எழுதப்பட்ட சித்திரம் என்று  நினைத்து விடவேண்டாம். இவை எல்லாம் மிகவும் ஆச்சரியமான சித்திரங்கள். எல்லாமே மனிதர்கள் வாழாத இடமான, மிகப்பெரிய நிலப்பரப்பில் வரையப்பட்ட சித்திரங்கள். 500 சதுர கி.மீ. பரப்பளவில் (நன்றாகக் கவனியுங்கள் சதுர மீட்டர்கள் அல்ல, சதுர கிலோ மீட்டர்) இந்தச் சித்திரங்களும் கோடுகளும் அமைந்திருக்கின்றன என்றால் நீங்களே கற்பனை பண்ணிப் பாருங்கள்.
இந்தப் படத்தில் பார்க்கும் கோடுகள் எல்லாமே விமானத்தில் இருந்து எடுத்தாலும் தெளிவாகத் தெரியும் அளவிற்கு கீறப்பட்டிருக்கின்றன. அத்துடன் கீறப்பட்ட நேர்க்கோடுகள், நினைத்தே பார்க்க முடியாத அளவிற்கு நேராக, நேர்த்தியாக வரையப்பட்டிருக்கின்றன. நேராக கோடு வரைவது என்பது ஆச்சரியமே கிடையாது. அவற்றின் பிரமாண்டமே எம்மை ஆச்சரியப்படுத்துகின்றன. இங்கு கோடுகள் மட்டும் கீறப்பட்டிருக்கவில்லை. பலவிதமான வடிவங்களும், சித்திரங்களும் வரையப்பட்டிருக்கின்றன. 

இந்தச் சித்திரங்களை மூன்று விதமான வகைகளில் நாம் பிரிக்கலாம். 1.நேர் கோடுகள், 2.கேத்திர கணித (Goematery) முறையிலான வடிவங்கள், 3.மிருகங்கள், பறவைகள் போன்ற உருவங்கள். 

இதில் 800 க்கும் அதிகமான கோடுகள், கேத்திர கணித வரைவுகளும்நூற்றுக்கும் மேற்பட்ட மிருகங்கள், பறவைகளின் உருவங்களும் அடங்கும். இவற்றில் ஐம்பதுக்கும் மேலாக உள்ள உருவங்கள் மிக மிகப் பிரமாண்டமானவை. மிகப் பெரிய உருவங்கள்  285 மீற்றர் நீளத்துக்கும் வரையப் பட்டிருக்கிறது.  அதாவது கால் கிலோமீற்றர் நீளம். அத்துடன், நேர்கோடுகள் பல கி.மீ. நீளத்துக்கு வரையப்பட்டுள்ளன என்பதைப் பார்த்தால் ஆச்சரியத்தில் திகைத்து விடுவீர்கள். இவற்றையெல்லாம் எழுத்துக்களால் எழுதி விவரிப்பதை விடப் படங்கள் மூலமாக விவரிப்பதே இலகுவாக இருக்கும்.
எல்லாமே ஆச்சரியங்கள்! "எப்படி இதை வரைந்தார்கள்?" என்னும் கேள்வி எமக்கு எழுந்தாலும், "ஏன் இதை வரைந்தார்கள்?" என்னும் கேள்விதான் இங்கு எல்லோருமே வியக்கும் விசயமாகிறது. நிலத்தில் இருந்து பார்க்கும் போது, இந்தச் சித்திரங்களின் முழுமை எவருக்குமே தெரியாது. இவற்றைப் பார்க்க வேண்டும் என்றால் வானத்தில் உயரப் பறந்தால் மட்டுமே முடியும். அப்படி என்றால் இதை வரைந்த நாஸ்காவினர், யார் பார்க்க வேண்டும் என்று இப்படி வரைந்தார்கள்?  2500 ஆண்டுகளுக்கு முன்னர் இவை வரையப் பட்டிருகின்றன என்பது இன்னும் யோசிக்க வைக்கிறது.

இந்த நாஸ்கா உருவங்களில் குரங்கு, நாய், சிலந்தி, பல்லி, திமிங்கலம், மீன், ஹம்மிங் பறவை என்று தெரிந்த பல உருவங்கள் இருந்தாலும், தெரியாத உருவங்களும் பல இருக்கின்றன. இவற்றை வரைந்ததற்கு நிச்சயம் ஒரு அர்த்தம் இருந்தே தீரவேண்டும். அவை என்ன?
இந்த ஹம்மிங் பறவை (Humming bird) இரண்டு புட்பால் மைதானங்களின் அளவுடையது. அதாவது 285 மீற்றர்கள். 
கணினியில் அச்சுப் பதித்துத் தரும் 'ப்ளொட்டர்' (Plotter) என்னும் இயந்திரம் போல, தொடங்கிய புள்ளியும், முடிந்த புள்ளியும் எதுவெனத் தெரியாமல், ஒரே தொடர்ச்சியாய் அந்தச் சித்திரங்கள் ஒரே கோட்டில் கீறப்பட்டுள்ளன. ஆச்சரியகரமாக அந்தப் படங்களின் ஏதோ ஒரு இடம் நீட்டப்பட்டு முடிவடைந்திருக்கும். குறிப்பாக, அந்தக் குரங்கின் வாலைக் கவனித்தீர்களானால்அதனுடன் இன்னுமொரு தொடர்ச்சி இருக்கும். அவையெல்லாம் என்ன காரணங்களினால் அப்படி வரையப்பட்டிருக்கின்றன என்றே புரியவில்லை. தற்கால ஆராய்ச்சியாளர்கள் சிலர், அவை போன்ற சித்திரங்கள் சிலதைப் பிரதி செய்து வரைந்து காட்டினாலும், அந்தக் காலத்தில் அது எப்படிச் சாத்தியமாக இருந்தது என்னும் கேள்விதான் இங்கு பிரமிக்க வைக்கிறது.

இவற்றுடன் இந்த வரைவுகள் முடிந்திருந்தால் பெரிதாக அலட்டியிருக்கத் தேவையில்லை. ஆனால் அவற்றில் இருந்த இரண்டு விசயங்கள் நிறைய யோசிக்க வைத்தன. பலரின் கவனத்தைக் கவர்ந்து இழுத்ததும் அந்த இரண்டு சித்திரங்களும்தான். பல மீற்றர்கள் நீளமான விமானம் இறங்கும் 'ஓடு பாதை' போல அமைந்த ஒரு அமைப்பு அங்கே காணப்பட்டது. இந்த அமைப்பு எதற்காக ஏற்பட்டது அல்லது இது விண்வெளியில் இருந்து வந்து இறங்கும் விமானத்தின் ஓடு பாதையேதானா
இரண்டாவது, மலை ஒன்றில் வான் நோக்கிப் பார்த்துக் கொண்டு, ஒரு கையால் வானைச் சுட்டிக் காட்டியபடி இருக்கும் ஒரு மிகப் பெரிய மனிதனின் சித்திரம்யாரையோ வரவேற்பது போலவோ அல்லது யாரையோ எதிர்பார்த்துக் காத்திருப்பது போலவோ. அந்தச் சித்திரம் கீறப்பட்டிருக்கிறது அல்லது அவர்கள் மேலே இருக்கிறார்கள் என்று காட்டுவதாகவும் இருக்கலாம். இந்தச் சித்திரத்துக்கு  ' அஸ்ட்ரோநாட்' (The Astronaut) என்று பெயர் கூட வைத்திருக்கிறார்கள்.
இந்த மனிதன் யாரை எதிர்பார்த்துக் காத்திருக்கிறான் அல்லது இந்த மனிதனே ஒரு ஏலியன்தானோ
நாஸ்காவின் சித்திரங்களில் சில இந்த அமைப்பில்தான் வரையப்பட்டிருக்கின்றன. 
இந்தச் சித்திரங்களில் சில வினோதங்களும் உண்டு. குரங்கு போன்ற சித்திரத்திலும், வேறு சில சித்திரங்களிலும், ஒரு கையில் நான்கு விரல்களும், அடுத்த கையில் ஐந்து விரல்களும் காணப்படுகின்றன.

ஏன் இப்படி வரைந்திருக்கிறார்கள்? இவ்வளவு நேர்த்தியாக வரைந்தவர்கள் அப்படி ஒரு பிழையை விடுவார்களா? இவற்றிற்கெல்லாம் காரணங்களே தெரியவில்லை அல்லது இவையெல்லாம் நமக்கு ஏதாவது செய்திகளைச் சொல்கின்றனவா?
இந்தச் சித்திரங்கள் பற்றி ஆராய்ச்சியாளர்கள் சொல்வது இதுதான்! இந்தச் சித்திரங்கள் மூலமாக, நாஸ்கா மக்கள் வானத்தில் பறந்து வந்த யாருக்கோ எதையோ அறிவித்திருக்கிறார்கள் அல்லது நாஸ்கா மக்களுக்கு, விண்ணில் இருந்து வந்தவர்கள் யாரோ இப்படி வரையும் தகவல்களைச் சொல்லிச் சென்றுள்ளார்கள் என்பதுதான் அது. நாஸ்கா 
அமைந்திருக்கும் 'பெரு' (Peru) நாடும் மாயா இனத்தவர்கள் வாழ்ந்த பிரதேசங்களுக்கு அண்மையிலேயே இருக்கின்றது என்பது மேலும் ஒரு விசேசமாகின்றது.

உலகில் அவிழ்க்கப்படாத மூன்று மிஸ்டரிகள் (Mystery) இருந்தாலும், அறிவியல் வியக்கும் முன்று முக்கிய மிஸ்டரிகள் உண்டு.  அவை 1. கிறிஸ்டல் மண்டையோடுகள் (Crystal sculls), 2. நாஸ்கா கோடுகள் (Nazca lines), 3. சோளச் சித்திரங்கள் (Crop circles) என்பன. இந்த மூன்றும் வேற்றுக் கிரக மனிதர்கள் சம்பந்தமானவை என்று கருதப்படுகின்றன.  இவற்றில் கிறிஸ்டல் மண்டையோடுகள், நாஸ்கா கோடுகள் ஆகிய இரண்டையும் முழுமையாகப் பார்க்காவிட்டாலும், ஓரளவுக்குப் பார்த்திருக்கிறோம். பார்க்காமல் இருப்பது சோளச் சித்திரங்கள்தான். ஆனால் அதை நாம் பார்ப்பதற்கு முன், மாயா இனத்தவர் பற்றி முழுமையாகப் பார்த்துவிட்டு வரலாம். 

அடுத்த தொடரில் நேரடியாக மாயாவைப் பற்றித் தெரிந்து கொள்வோமா....?
 பாகம்: 9
இதுவரை உலகில் வாழ்ந்த இனங்களில் அதியுயர் அறிவுடன் வாழ்ந்ததாக கருதப்படும் ஒரே இனம் மாயா இனம்தான். அந்த மாயா இனம் பற்றியும், அவர்கள் '2012 இல் உலகம் அழியும்' என்று கூறியது பற்றியும் பேச ஆரம்பித்த இந்தத் தொடர், அது தாண்டி வேறு சில இடங்களிலும், விடை தெரியாத சில மர்மங்களிலும் பயணித்தது. இதுவரை எம்மால் பார்க்கப்பட்டவை கூட சிறிய அளவுதான். பார்க்க வேண்டியவை இன்னும் நிறையவே உண்டு. ஆனாலும் நாம் அவற்றையும் ஆராய ஆரம்பித்தால் அது நீண்டு கொண்டே போகும். 2012 மார்கழி வரை கூட நீண்டாலும் ஆச்சரியம் இல்லை. அப்புறம் இந்தத் தொடர் எழுத வேண்டிய அவசியமே இல்லாமல் போய்விடும்.

"2012ம் வருடம் மார்கழி மாதம் 21ம் திகதி உலகம் அழியும்" என்று மிகப்பெரிய எழுத்தில் எல்லா நாட்டு மக்களும் அலறும்படிக்கு, ஒரு குறித்த நாளுக்கு முக்கியத்துவத்தைக் கொடுத்திருக்கிறார்கள் மாயா இன மக்கள். இந்தியாவில் இது பற்றி அதிக அளவில் பேசப்படாவிட்டாலும், மேற்குலகம் தினம் தினம் இதைப் பேசிக் கொண்டே இருக்கிறது. ஐரோப்பிய, அமெரிக்க தொலைக்காட்சிகளில் ஏதோ ஒன்று, ஒவ்வொரு கணமும் இதை ஒளிபரப்பிக் கொண்டே இருக்கிறது. இதற்கெல்லாம் ஒரே காரணம், நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த காட்டுவாசி மக்களான மாயா இனத்தவர்கள் கணித்த ஒரு 'நாட்காட்டி' (Calendar). ஒரு குறித்த நாளில் ஆரம்பித்த அந்த நாட்காட்டி, 2012ம் ஆண்டு மார்கழி 21ம் திகதியுடன் முடிவடைகிறது. முடிவடைகிறதென்றால், அப்படியே முடிந்து போகிறது. அதற்கு அப்புறம் அதில் எதுவுமே இல்லை.

சரி, அவர்கள் நாட்காட்டி முடிந்தால் நமக்கென்ன? அறிவே இல்லாத காட்டுவாசிகள் உருவாக்கிய ஒரு நாட்காட்டி முடிவடைகிறது. அவ்வளவுதானே! அதற்கேன் நாம் இப்படிப் போட்டு அலட்டிக் கொள்ள வேண்டும்? உலகம் அழியும் என்று பல காலகட்டங்களில், வெவ்வேறு விதமாகப் பலர் சொல்லியிருந்தார்களே! அவற்றை எல்லாம் நாம் பெரிதாக எடுக்கவில்லையே! அப்புறம் ஏன் மாயன் சொன்னதில் மட்டும் நாம் மிகுந்த நம்பிக்கையை வைக்க வேண்டும்? இந்து மதம் கலிகாலத்துடன் உலகம் அழியும் என்கிறது. கிருஸ்தவ மதமும் உலக அழிவை வலியுறுத்துகிறது. அதிகம் ஏன்? கடந்த 2000ம் ஆண்டு கூட, உலகம் அழியும் என்று ஒரு மிகப் பெரிய நம்பிக்கையும் இருந்தது. ஆனால் எதைப் பற்றியும் நாம் அலட்டிக் கொள்ளவில்லையே! இவற்றிற்கெல்லாம் அதிக அங்கீகாரம் கொடுக்காத நாம், மாயாக்களுக்கு மட்டும் ஏன் கொடுக்க வேண்டும்? இப்படிப்பட்ட கேள்விகள் எமக்கு சுலபமாக எழுந்துவிடுகிறதைத் தடுக்க முடியாதல்லவா?
ஆனால்............!

மாயன் சொன்னவற்றை தவறு என்று வெகு சுலபமாக தட்டிக் கழித்துச் செல்ல அறிவியலாளர்களுக்கே கொஞ்சம் தயக்கம் இருக்கிறது. இதைத் தீவிரமாகவே அவர்கள் பார்க்கின்றனர்? மாயன் சொன்னவை உண்மையாகலாமோ என்னும் பயம் அவர்களுக்கும் உண்டு. மாயன்களின் சுவடுகளும், அவர்கள் விட்டுச் சென்ற சுவடிகளும்தான் இந்தப் பயத்தை அவர்களுக்கு ஏற்படுத்தக் காரணமாக அமைந்துவிட்டன. மாயன்கள் சொன்னவற்றை அறிவியலுடன் பொருத்திப் பார்க்கும் போது, ஏற்பட்ட வியப்புத்தான் இந்தப் பயத்தை இன்னும் அதிகமாக்கியது. இதுவரை உலகில் இருந்த, இருக்கின்ற எந்த இனத்துக்குமே இல்லாத விசேசங்கள் பல, மாயன்களுக்கு இருந்திருக்கிறது. அந்த ஆச்சரியப்படும் விசேசத் தன்மைதான் மாயன்களிடம் இப்படி ஒரு நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

மாயன்கள் கணிதம், வானியல், கட்டடக் கலை, நகர அமைப்பு, அறிவியல், உணவு வேளாண்மை, கலை, கலாச்சாரம், விளையாட்டு என அனைத்திலும் உச்சத்தில் இருந்திருக்கிறார்கள். இவையெல்லாம் எப்போ? ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன். அதுதான் எம்மை வியக்க வைக்கிறது. இவற்றை எல்லாம் வாய் வார்த்தைகளால் சொன்னால் அதைச் சரியாகப் புரிவது கொஞ்சம் கஷ்டம்தான். அதனால் மாயா இனத்தவர்கள் பற்றிக் கொஞ்சம் விளக்கமாகவே பார்க்கலாமா.....!

இன்று நாம் பயன்படுத்தும் கணிதம், 'தசம கணிதம்' (Decimal System) என்னும் அடிப்படையைக் கொண்டது. அதாவது 10 அடியாகக் கொண்டு உருவாக்கிய கணிதம். 1, 10, 100, 1000, 10000...... இப்படி. அத்துடன் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 எனப் பத்து இலக்கங்களையும் எமது கணக்கியலில் நாம் பயன்படுத்துகிறோம். இப்படி 10 அடியாக (base10 or radix10 ) மனிதன் கணிக்க ஆரம்பித்ததற்கு ஒரே காரணம் அவனுக்கு கைகளில் 10 விரல்கள் இருந்ததுதான். ஆரம்ப காலங்களில் கை விரல்களால் கணக்கிட்ட வழக்கம் தொடர, அதுவே கணிதமுமாகியது.

இப்பொழுது இப்படிப் பாருங்கள்.......! மனிதனுக்கு ஒரு கையில் மூன்றே மூன்று விரல்கள்தான் இருக்கிறது என வைத்துக் கொண்டால், இரண்டு கைகளிலும் மொத்தமாக அவனுக்கு 6 விரல்கள் இருந்திருக்கும். அப்போது, மனிதனின் கணிதவியல் 6 அடியாகக் கொண்டு இருந்திருக்கும். அதாவது 1, 6, 36, 216, 1296....... என இருந்திருக்கும். என்ன புரிகிறதா…? ஆனால் 6 அடியாகக் கொண்டு கணிப்பதை விட, 10 அடியாக கொண்டு கணிப்பது, மிகப்பெரிய எண்ணை அமைப்பதற்கு சுலபமாக இருக்கும். காரணம் 10 என்பது 6 விடப் பெரியது. 'அடி எண்' (base or radix) பெரிதாக இருந்தால், அதிக எண்ணிக்கையில் கணிப்பது இலகுவாக இருக்கும்.

ஆனால் கணினியை (Computer) எடுத்துக் கொள்ளுங்கள். கணினிக்கு பத்து விரல்கள் கிடையாது. அதற்கு இருப்பது இரண்டே இரண்டு விரல்கள்தான். ஆம்! கணினிக்கு 1, 0 என இரண்டே இரண்டு விரல்கள்தான் உள்ளது. மின்சாரம் சென்றால் 1, மின்சாரம் செல்லாவிட்டால் 0. ஆகையால், கணினி, 2 அடியாகக் கொண்டே கணிக்கிறது. அப்படிக் கணிப்பதை பைனரி சிஸ்டம் (Binary System) என்பார்கள். அது 1, 2, 4, 8, 16..... என அமையும். கணிதத்தில் 'அடி எண்' அதிகமாக இருந்தால் கணிப்பது சுலபம் என்றேன் அல்லவா? ஆனால் மனிதனை விடக் கணினி மிக மிக வேகமாகக் கணிக்கிறதே! அப்படிக் கணிப்பதற்குக் காரணம் மனிதன் கணிப்பது போல பத்து இலக்கங்கள் இல்லாமல், கணினிக்கு இரண்டே இரண்டு இலக்கங்களை மட்டும் பயன்படுத்தப்படுவதுதான். அந்த இரண்டு இலக்கங்களும் 1, 0 ஆகும்.

சரியாகக் கவனியுங்கள், சுலபமாய் எண்களை அமைப்பது என்பது வேறு, வேகமாய்க் கணிப்பது என்பது வேறு. இரண்டும் வேறுவேறான விசயங்கள் என்பதைத் தவற விட்டுவிடாதீர்கள்.
இப்போது மாயன்களிடம் நாம் வரலாம்........!

அதிசயிக்கத்தக்க வகையில் மாயன்கள் 20 அடியாகக் கொண்டு கணித்திருக்கிறார்கள். கைவிரல்கள் பத்து, கால் விரல்கள் பத்து என இது அமைந்திருக்கிறது. 20 அடியாகக் கொள்வதை, 'வைஜெசிமல் சிஸ்டம்' (Vigesimal System) என்பார்கள். அது 1, 20, 400, 8000, 160000..... என அமையும். இதில் ஆச்சரியமான விசயம் என்னவென்றால், 20 அடியாகக் கொண்டு கணிப்பதற்கு மாயன்கள் இருபது இலக்கங்களைப் பாவனைக்கு வைத்திருக்கவில்லை. மூன்றே மூன்று இலக்கங்களைத்தான் பாவித்திருக்கிறார்கள். அதிக எண்ணிக்கையில் சுலபமாகக் கணிப்பதற்கு 20 இன் அடியும், கணினியைப் போல வேகமாய்க் கணிப்பதற்கு மூன்று இலக்கங்களும் அவர்களுக்கு உதவியிருக்கிறது.

புள்ளி, நேர்கோடு, நீள்வட்டம் என்னும் மூன்றும்தான் அவர்கள் பாவித்த அந்த மூன்று இலக்கங்கள். இவற்றில் புள்ளி 1ஐயும், நேர்கோடு 5ஐயும், நீள்வட்டம் பூச்சியத்தையும் குறிக்கிறது.

மாயன்கள் பாவித்த எண்களின் அட்டவணையைப் பார்த்தால் உங்களுக்கு அது புரியும்.
புள்ளிகளையும், கோடுகளையும் வைத்து, லட்சங்களில் எப்படி மிகப் பெரிய எண்களைக் கணித்தார்கள் என்பதற்கான சில விளக்கப் படங்களையும் உங்களுக்கான புரிதலுக்காகத் தருகிறேன்.
இதனுடன் இன்னுமொரு விசேசமாக, எண்ணிக்கைகளை இலக்கங்களால் மட்டுமில்லாமல், 'ஹிரொகிளிஃப்' (Hieroglyph) என்னும் சித்திர எழுத்துகள் மூலமும் எழுதியிருந்தார்கள். இந்த வழமை மாயாக்களுக்கும், எகிப்தியர்களுக்கும் தனிச் சிறப்பாக அமைந்திருந்தது. இந்தச் சித்திர எழுத்துகள்தான் பின்னர் மாயன்களைப் பற்றி நாம் முழுமையாகப் புரிந்து கொள்ள பெரிதாக உதவியது.
இந்த இலக்கங்களின் முறையை வைத்து மாயன்கள் கோடிக்கனக்கான எண்ணிக்கையை கூட எழுதிவிடுகிறார்கள். சுலபமாக கணித்துவிடுகிறார்கள். நாம் கோடிகள், ஆயிரம் கோடிகள் என்பவற்றை ஊழல் பற்றிச் சொல்வதற்கு பயன்படுத்தும் போது, மாயன்கள் எதற்கு அவற்றைப் பயன்படுத்தினார்கள் தெரியுமா....? வானியலில். வானத்தில் சூரியக் குடும்பத்தின் ஒவ்வொரு கோளும் எப்படி நகர்கிறது என்பதைத் துல்லியமாக கணித்தார்கள் மாயன்கள். அவர்கள் அப்படிக் கணித்ததுதான் கடைசியில் எங்கள் அமைதியையே குலைக்கும், '2012 இல் உலகம் அழியும்' என்பதில் கொண்டு வந்து விட்டும் இருக்கிறது.

மாயன்கள் வானவியலில் ஆராய்ச்சி செய்தார்கள் என்று சொல்லும் நாம் அவர்கள் எதை ஆராய்ந்தார்கள் என்று தெரிந்தால் நம்பவே முடியாமல் நகர்ந்துவிடுவோம். ஆம்! சூரியனையும், அதன் கோள்களையும் மற்ற இனத்தவர்கள் ஆராய்ந்த போது, மாயன்கள் பால்வெளி மண்டலத்தையே (Milky way) ஆராய்ந்திருக்கிறார்கள். வெறும் கண்களால் சந்திரனைத் தாண்டி அவ்வப்போது செவ்வாய், வியாழன் ஆகியவற்றை மட்டுமே பார்க்கக் கூடிய எமக்கு, மாயாக்கள் பால்வெளி மண்டலத்தையே ஆராய்ந்தார்கள் என்றால், அதன் சாத்தியங்கள் எது என்பது பற்றி கேள்வி எழுவது நியாயமான ஒன்றுதான்.
மாயாக்கள் அப்படி என்னதான் ஆராய்ந்தார்கள்? எப்படியெல்லாம் ஆராய்ந்தார்கள்? என்பதை அடுத்த தொடரில் பார்ப்போமா..? 



 பாகம்: 10
கடந்த பதிவில் மாயனின் கணித அறிவைப் பற்றி விளக்கமாகச் சொல்ல வேண்டும் என்பதற்காகஅவர்களின் கணிதத்தை அதிகமாக விளக்கியது, பலருக்குப் புரிந்திருக்கலாம், சிலருக்குப் புரியாமல் இருக்கலாம். புரியாமல் இருந்தது பற்றிக் கவலைப்படவே தேவையில்லை. எமக்குப் புரிய வேண்டியதுமாயன்கள் கணிதத்தில் வல்லவர்களாக இருந்தார்கள் என்பது மட்டும்தான். 

அமெரிக்கா என்று சொல்லப்படும் மிகப் பெரிய நிலப்பரப்புவட அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா என்று மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. மத்திய அமெரிக்காவில் மெக்சிக்கோ, குவாத்தமாலா, எல் சல்வடோர், கோஸ்டா ரீகா, கொண்டுராஸ், பனாமா, நிக்கரகூவா, பெலிசே, ஹைட்டி, கியூபா போன்ற நாடுகள் இருக்கின்றன. 'உலக அழிவுப் புகழ்' மாயன்கள் வாழ்ந்து வந்த இடமும் இந்த மத்திய அமெரிக்க நாடுகளில்தான். குறிப்பாக மெக்சிக்கோவிற்கு தென்கிழக்குப் பகுதியில் ஆரம்பித்து, ஏறத்தாழ மூன்று இலட்சத்து ஐம்பதினாயிரம் (350000) சதுர கி.மீ பரப்பளவுள்ள நிலப்பரப்பில் மாயன்கள் வாழ்ந்து வந்தார்கள்.

மாயனின் வரலாறு கி.மு.4000 ஆண்டுகளுக்கு முன்னரே ஆரம்பமாகியிருக்கிறது என்பதற்கு சரித்திர ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. ஆனாலும் கி.மு.2000 முதல் கி.பி.900 ஆண்டுகள் வரை உள்ள காலப் பகுதிகளில்தான் மாயன்களின் நாகரீகம் உச்சத்தை அடைந்திருந்தது. இந்தக் காலகட்டங்களில், உலகின் பல நாடுகளில், பல இனங்களுக்கிடையே மதங்கள் தோன்றியிருந்தன. அப்படித் தோன்றிய மதங்களும், அதனைக் கடைப்பிடித்த இனங்களும், நாம் வாழும் பூமிதான் பிரதானமானது என்று நினைத்திருந்தார்கள். பூமியை மையமாக வைத்தே சூரியன் உட்பட அனைத்துக் கோள்களும் இயங்குகின்றன என்றும் நம்பி வந்தார்கள்.
கடவுள் முதலில் பூமியை உருவாக்கினார். அதன் பின்னர் பூமி இருட்டாக இருக்கிறது என்று கருதி, சூரியனையும், சந்திரனையும் படைத்தார் என்று பைபிள், குரான், யூதமதம் ஆகிய மூன்று பிரதான மதங்களும் சொல்கின்றன. இந்து மதத்தின் உபவேதங்களில் ஒன்றான, 'ஜோதிசம்' எனச் சொல்லப்படும் சோதிடத்தில், பூமியை மையமாக வைத்து நவக்கிரகங்கள் சுற்றுகின்றன என்ற அடிப்படையிலேயே கணிப்புகள் யாவும் இருந்திருக்கிறது.

அஸ்ட்ராலாஜி (Astrology), அஸ்ட்ரானாமி (Astronomy) என்னும் இரண்டு ஆங்கிலச் சொற்களை  நாம் அடிக்கடி பாவித்தாலும்அவை இரண்டினதும் வித்தியாசத்தைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. வானத்தில் இருக்கும் கோள்களைப் பற்றியும், நட்சத்திரங்களைப் பற்றியும் இந்த இரண்டுமே சொல்வதால், இவற்றை அனேகர் ஒன்றாகவே பார்க்கின்றனர். ஆனால் அஸ்ட்ரானாமி என்பது விஞ்ஞானம், அஸ்ட்ராலாஜி என்பது சாத்திரம். அதாவது ஒன்று வானவியல் மற்றது வானசாத்திரம்.   
மாயன் காலங்களில் உலகில் உள்ள பல இனத்தவர்கள், வானத்தில் உள்ள  நட்சத்திரங்களினதும், கோள்களினதும் நகர்வுகளைக் கவனித்தே வந்திருக்கிறார்கள். ஆனால் எல்லோரும் 'வான சாத்திரம்' என்னும் நிலையில்தான் அவற்றைக் கவனித்திருக்கிறார்கள். மாயன்களோ அவற்றை 'வானவியல்' என்னும் அறிவியல் சிந்தனையுடன் வானத்தை ஆராய்ந்திருக்கிறார்கள்.  இதுவே இன்று அவர்கள் வசம் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. மாயன்கள் மிகத் துல்லியமாக சூரியன், பூமி, சந்திரன், செவ்வாய், புதன், சனி, வியாழன் போன்ற கோள்களின் அசைவுகளைக் கவனித்திருக்கிறார்கள், கணித்திருக்கிறார்கள்.

மாயன்களின் வானியல் கணிப்பை உலகுக்கு உரத்துச் சொல்லும் வரலாற்றுப் பதிவொன்று இன்றும் மாயன்கள் வாழ்ந்த இடமொன்றில் நிமிர்ந்து நிற்கிறது. மெக்சிக்கோ நாட்டில் உள்ள யூகட்டான் (Yucatan) மாநிலத்தில், மாயன்களால் கட்டப்பட்ட 'ஷிசேன் இட்ஷா' (Chichen Itza) என்னும் பிரமிட்தான் அது. 'பிரமிட்' (Pyramid) என்றதும் எகிப்தின் பிரமிட்கள்தான் உங்களுக்கு ஞாபகம் வரும். "மாயன்களிடமும் பிரமிட் இருந்ததா?" என்று நீங்கள் பிரமிக்கலாம். 'உலகின் விந்தைகளும், மர்மங்களும் கடைசியில் ஒரு புள்ளியில் ஒடுங்கிவிடும்' என்று நான் ஆரம்பத்தில் சொன்னது போல, எல்லாவற்றிற்கும் இடை யில் ஏதோ தொடர்புகள் இருக்கலாம். அவற்றை பின்னர் பார்ப்போம். அதற்கு முன்னர் ஷிசேன் இட்ஷா பற்றிப் பார்க்கலாம். 
வானியலை மாயன்கள் எந்த அளவுக்குப் புரிந்திருக்கிறார்கள் என்பதற்கு அடையாளமாக இந்தப் பிரமிட்டை அவர்கள் கட்டியிருக்கிறார்கள். நான்கு பக்கங்களைக் கொண்ட இந்தப் பிரமிட்டில், வரிசையாக ஒவ்வொரு பக்கமும் படிகள் அமைக்கப் பட்டிருக்கிறது. இந்த நான்கு பக்கங்களும் நான்கு பருவ காலங்களைக் குறிக்கின்றன. ஒவ்வொரு பக்கத்திற்கும் தலா 91 படிகள் இருக்கின்றன. மொத்தமாக நான்கு பக்கங்களும் சேர்த்து 364 படிகள். ஆனால்வருடத்திற்கு 365 நாட்கள் அல்லவா இருக்கிறது. அதை எப்படி நான்காகப் பிரிப்பது? ஒரு படி மிஞ்சுமல்லவாஎன்ன செய்தார்கள் மாயன்கள்? கடைசியாக உச்சத்தில் ஒரு மேடையை ஒரே படியாக, சதுரமாகக் கட்டிவிட்டார்கள். மொத்தமாக 365 படிகள் வந்துவிட்டது. ஒரு வருடத்தின் நாட்களை பிரமிட்டாகவே மாயன்கள் கட்டியிருப்பது, ஆராய்ச்சியாளர்களை இன்றும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.  
பூமி, சூரியனைச் சுற்றிவர 365 நாட்கள் எடுக்கிறது என்பதை மாயன்கள் எப்படிக் கணித்தார்கள்? இந்தத் துல்லியமான வானவியல் கணிப்பு முறையை எப்படி அறிந்து கொண்டார்கள்?  நட்சத்திரங்கள்கோள்கள் போன்றவை இயங்கும் விதத்தை எப்படி அவதானித்தார்கள்? என்னும் கேள்விக்கெல்லாம் பதில் மாயன்கள் வாழ்ந்த இடத்திலேயே எமக்குக் கிடைத்தது. அதை அறிவதற்கு முன்னர் இந்தப் படங்களைப் பாருங்கள்.
இவையெல்லாம், நாம் தற்போது வானத்தில் உள்ளவற்றை ஆராய உபயோகிக்கும் சில  வானவியல் அவதான நிலையங்கள் (Observatory Dome). வேறு வேறு இடங்களில் இருப்பவை
என்ன பார்த்துவிட்டீர்களா……….?

இப்போ மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மாயன்களால் வானத்தில் உள்ள நட்சத்திரங்களையும் கோள்களையும் அவதானிக்கக் கட்டப்பட்ட கட்டடத்தைப் பாருங்கள். யார் யாரிடம் இருந்து எடுத்துக் கொண்டார்கள்? இப்படி ஒரு ஒற்றுமை எப்படி நிகழலாம்? அல்லது இது ஒரு இயல்பான கட்டட வடிவமைப்பா….? எல்லாமே தற்செயல்தானா...? சரி, அதை நீங்களே பாருங்கள்!
வானத்தை ஆராய்வதற்கென்று தனியாக அவதானிப்பு நிலையம் ஒன்றை மாயன்கள் அந்தக் காலத்திலேயே கட்டியிருக்கிறார்கள். அப்ப்டிக் கட்டியிருப்பது ஒன்றும் ஆச்சரியமல்ல, அது நவீன காலத்து அவதானிப்பு நிலையத்துடன் பொருந்தும்படி கட்டப்பட்டிருப்பதுதான் வியப்பை அளிக்கிறது. 

ஒரு மனிதன், தன்னையும் தான்சார்ந்த சமூகத்தையும் திடமாக நிலைப்படுத்தி அமர்ந்து கொள்வதற்கு, தனக்கென ஒரு கலாச்சார நாற்காலியைத் தயார்படுத்துகிறான்அந்தக் கலாச்சார நாற்காலியை இனம், மொழி, மதம், நாடு என்ற நான்கு கால்களுடன் அவன் அமைத்துக் கொள்கிறான்உலக நாடுகளிலும் உள்ள ஒவ்வொரு இனமும், தனக்கென ஒரு தனித்துவத்தையும், அடையாளத்தையும் காத்து வைத்திருக்கவே விரும்புகின்றது. அப்படி அவர்கள் விரும்பும்  அடையாளத்தில், அவர்களுக்கென உருவாக்கிய நாட்காட்டிகளும் (காலண்டர்) அடங்குகின்றன. இந்த அடிப்படையில், உலக மக்களிடையே பல நாட்காட்டிகள் வழக்கத்தில் உண்டு. வெவ்வேறு நாட்காட்டிகள் இருப்பது குழப்பத்தை உருவாக்கியதால், பின்னாட்களில் அனைவருக்கும் பொதுவாக இருக்கட்டும் என ஒரு நாட்காட்டியைக் கொண்டு வந்தனர். அப்படி தற்காலப் பாவனைக்கு நாம் வைத்திருக்கும் நாட்காட்டி, கிரிகோரியன் நாட்காட்டி (Gregorian calendar) எனப்படுகிறது. கிரிகோரியன் என்பவர் வத்திக்கானில் பாப்பாக இருந்தவர்.
கிரிகோரியன் நாட்காட்டி, தை மாதத்தில் ஆரம்பித்து மார்கழி மாதம் வரை 365 நாட்களையும்நான்காவது வருடம் 'லீப் வருடம்' என்னும் பெயரில் 366 நாட்களையும் கொண்டிருக்கும். இது போலவே மாயன்களும் தமக்கென தனியாக நாட்காட்டியைக் வைத்திருந்தார்கள். ஆனால் அவர்கள் தமக்கென ஒரு நாட்காட்டியை அல்லமூன்று நாட்காட்டிகளை உருவாக்கி வைத்திருந்தனர். அவை மூன்றும் வெவ்வேறு அடிப்படையகளில், வித்தியாசமாக அமைக்கப்பட்டவை.

'ஷோல்டுன்' (Choltun), 'ஷோல் அப்' (Chol’ab’), 'ஷோல் கிஜ்' (Chol q’ij) என்னும் மூன்றும்தான் மாயன்களிடம் இருந்த நாட்காட்டிகள். இதில் 'ஷோல்டுன்' என்னும் முதல் நாட்காட்டி, சூரியக் குடும்பத்தின் ஒட்டு மொத்த அசைவுகளைக் கொண்டு கணக்கிடப்பட்ட நாட்காட்டியாகும். இது நீண்ட 'காலக் கணக்கைக்' (Long count) கொண்டது. இதுதான் எங்கள் உலக அழிவு பற்றி இன்று பேசப்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்த நாட்காட்டி. அது பற்றி பின்னர் விரிவாகப் பார்க்கலாம்.

'ஷோல் அப்என்னும் இரண்டாவது நாட்காட்டி, எமது கிரிகோரியன் நாட்காட்டி போல, சூரியனைப் பூமி சுற்றும் சூரிய நாட்காட்டியாகும். இது 365 நாட்களைக் கொண்டது. ஷோல்க் 'இஜ் என்னும் மூன்றாவது நாட்காட்டி 260 நாட்களைக் கொண்ட நாட்காட்டி.
நாம் முதலில் 'ஷோல் அப்' நாட்காட்டி பற்றிப் பார்க்கலாம். இந்த நாட்காட்டி மொத்தமாக 19 மாதங்களைக் கொண்டது. அதில் 18 மாதங்கள், ஒவ்வொன்றும் 20 நாட்களைக் கொண்டவை. மொத்தமாக 18x 20 = 360  நாட்கள் வருகிறது. கடைசியாக வரும் 19 வது மாதம் 5 நாட்களைக் கொண்டது. மொத்தமாக 365 நாட்கள். மாயன்களின் முதல் மாதத்தின் பெயர் 'பொப்' (Pop) என்றும், கடைசி மாதம் 'வேயெப்' (Weyeb) என்றும் அழைக்கப்படுகிறது. அது போல, மாதம் தொடங்கும் முதல் நாள் 0 (பூச்சியம்) என்றும், மாதம் முடிவடையும் நாள் 19 என்றும் அழைக்கப்பட்டது. கடைசி மாதமான 'வேயெப்' மாதத்தின் முதல் நாள் 0 எனவும், கடைசி நாள் 4 எனவும் குறிக்கப்படுகிறது.  

மாயன்களின் புது வருடம் 'பொப் 0' (Pop 0) என்ற நாளில் ஆரம்பிக்கிறது. இது எமது தற்கால நாட்காட்டியின் சித்திரை மாதம் 1ம், 2ம், 3ம் திகதிகளில் மாறி மாறி வரும். கடைசி மாதமான 'வேயெப்' மாதம், மாயன்களின் சிறப்பான மாதம் ஆகும். கடவுளுக்கென அர்ப்பனிக்கப்பட்ட 5 நாட்களைக் கொண்ட மாதம் அது. கடவுளை வணங்கி கொண்டாடும் மாதமாக இது அமைகிறது. கிரிகோரியன் உருவாக்கிய நாட்காட்டியின் கடைசி ஐந்து நாட்களின் முன்னர் கிருஸ்து பிறந்தார் என்பதற்கும், அதாவது மார்கழி மாதம் 25ம் திகதி கிருஸ்து பிறந்தார் என்பதற்கும் இதற்கும் ஏதாவது சம்மந்தம் உண்டா என நீங்கள் நினைத்தால், அப்படி நினைப்பதற்கு நான் பொறுப்பல்ல.

மாயன் நாட்காட்டியின் மேலதிக மர்மங்களுடன் அடுத்த தொடரில் சந்திக்கிறேன்.
 

 பாகம்: 11 

மாயன்களிடம் மொத்தமாக மூன்று நாட்காட்டிகள் இருந்தன என்று கடந்த பதிவில் பார்த்தோம்.  மாயன்களிடம் இருந்த மூன்று நாட்காட்டிகளில், ஒன்று 365 நாட்களைக் கொண்டது. இரண்டாவது 260 நாட்களைக் கொண்டதுஆனால் இவை இரண்டுமே குறுகிய காலக் கணக்கைக் கொண்ட நாட்காட்டிகள். மாயன்கள் மிகப் பெரிய சுற்றைக் கொண்ட ஒரு நாட்காட்டியை உருவாக்கினார்கள். சூரியக் குடும்பத்தின் ஒட்டு மொத்த அசைவைக் கொண்டு உருவாக்கபட்டது அது. அதை  'நீண்ட கால அளவு நாட்காட்டி' (Long Count Periods) என்றைழைக்கின்றனர் தற்கால ஆராய்ச்சியாளர்கள். இது ஷோல்டுன் (Choltun) என்று மாயன்களால் பெயரிடப்பட்டது.
படத்தில் காணப்படுவதுதான் மாயன்களின் 260 நாட்களைக் கொண்ட 'ஷோல்க் இஜ்' (Cholq ij) என்னும் பெயருடைய நாட்காட்டி.  ஒன்றுடன் ஒன்று இணைந்த இரண்டு சக்கரங்கள் முறையே 13 பிரிவுகளையும், 20 பிரிவுகளையும் கொண்டது. இந்த இரண்டு சக்கரங்களும் முழுமையாகச் சுற்றும் போது,  13X20=260 நாட்கள் முடிவடைந்திருக்கும். 

இதே போல, 365 நாட்களைக் கொண்டபெரிய சக்கரமுள்ள இன்னுமொரு 'ஷோல் அப்' (Chol’ab’) என்னும் இரண்டாவது நாட்காட்டியும் மாயனிடம் உண்டு.  ஆனால் மாயன்கள் அத்துடன் விட்டுவிடவில்லை. இந்த மூன்று சக்கரங்களையும் ஒன்றுடன் ஒன்று இணைத்து முழுமையாகச் சுற்றிவரக் கூடிய இன்னுமொரு நாட்காட்டியையும் உருவாக்கினார்கள். மாயனின் அதிபுத்திசாலித்தனத்தை உலகிற்கு தெரியப்படுத்தியது 'ஷோல்டுன்' (Choltun) என்னும்  இந்த நாட்காட்டிதான். 
இந்தப் படத்தில் உள்ளது போன்ற சில வட்ட வடிவமான சுற்றும் அச்சுகள் மாயன்களால் தயார் செய்யப்பட்டது. சிறிய அச்சைச் சுழற்றுவதன் மூலம் மற்றைய அச்சுகளும் சுழல்வது போல அது அமைக்கப்பட்டது. ஒவ்வொரு நாள் சுழற்சியின் மூலம் அந்த அச்சுகள் ஐந்து நிலைகளைச் மாறி மாறிச் சுட்டிக் காட்டும். அப்படிச் சுட்டிக் காட்டும் ஐந்து நிலைகளும ஐந்து எண்களை குறிக்கும்.  அந்த நாட்காட்டியின் முதல் நாள் 0, 0, 0, 0, 0 என்பதில் ஆரம்பிக்கும். மிகப் பெரிய அச்சு தனது ஒரு சுற்றைப் பூர்த்தியாக்கி ஆரம்ப நிலைக்கு வரும் போது, மீண்டும்  13, 0, 0, 0, 0 என்னும் இறுதி நாளை அடைகிறது. இதற்கு மொத்தமாக 5125 வருடங்கள் எடுக்கிறது.
அதாவது  ஆரம்ப நாளான 0, 0, 0, 0, 0 இல் ஆரம்பித்து, இறுதி நாளான 13, 0, 0, 0, 0 நாளை அடைய 5125 வருடங்கள் ஆகின்றது. மாயனின் இந்த நாட்காட்டியின் முதல் திகதியான 0, 0, 0, 0, 0 நாள் தற்போதுள்ள நவீன நாட்காட்டியின்படிகி.மு. 3114 ஆவணி மாதம் 11ம் திகதியிலிருந்து  ஆரம்பமாகிறது.  அது போல, முடிவடையும் திகதியான 13, 0, 0, 0, 0 நாள் தற்போதய நவீன நாட்காட்டியின்படி, கி.பி. 2012 மார்கழி மாதம் 21ம் திகதி 11:11:11 மணிக்கு முடிவடைகிறது. 
 மாயன் பற்றிய பல விசயங்களை, மிகவும் விளக்கமாக சொல்லாமல், நான் மேலோட்டமாகத்தான் சொல்லி வருகிறேன். காரணம் அதை வாசிக்கும் உங்களுக்கு ஒரு அயர்ச்சியை அது தோற்றுவிக்கலாம். அதனால், மாயன்களின் பெயர்கள், அவர்கள் பயன்படுத்திய பெயர்கள் ஆகியவற்றை தவிர்த்தே இந்தத் தொடரை எழுதி வருகிறேன். ஆனால் எல்லாவற்றையும் அப்படி விட்டுவிட்டுப் போய்விட முடியாது. சில தெளிவான விளக்கம்தான் இனி வர வேண்டியவற்றிற்கு முழுமையான அறிவைக் கொண்டு வரும் என்பதால், சிலவற்றை நான் சொல்லியே ஆக வேண்டும். இப்போ, கொஞ்சம் கவனத்தை அங்கே இங்கே பாய விடாமல் கூர்மைப்படுத்தி இதை வாசியுங்கள்.
மாயன் நாட்காட்டியின் 0, 0, 0, 0, 0 ஆரம்பநாள் 0, 0, 0, 0, 0   4 Ahau என்றுதான் இருக்கும். இதில் வரும் 'ஆகவ்' (Ahau) என்பதன் அர்த்தம் கடவுள் என்பதாகும்அத்துடன், 4 Ahau என்பதில் கடவுள் பூமியை உருவாக்கினார் என்பதே மாயன் முடிவு. இதன்படி, மாயன் நாட்காட்டியின் அச்சுக்கள் சுற்றும் போது, வரிசையாக கீழே தந்தபடி 1,0,0,0,0 பின்னர் 2,0,0,0,0 பின்னர் 3,0,0,0,0 …….. இப்படி நாட்காட்டி மாறிக் கொண்டே வரும்பதின்மூன்றாவது சுற்றின் பின்னர் 13,0,0,0,0 என்பதில் நாட்காட்டி வரும் போது சரியாக 4 Ahau மீண்டும் வருகிறது. இந்த நாள்தான் 22.12.2012.
என்ன புரிகிறதா……….? சரி, புரியாவிட்டால் அப்படியே கீழே இந்த அட்டவணையைப் 
பாருங்கள்………!  

0.0.0.0.0. 4 Ahau 8 Cumku
1.0.0.0.0. 3 Ahau 13 Ch´en
2.0.0.0.0. 2 Ahau 3 Uayeb
3.0.0.0.0. 1 Ahau 8 Yax
4.0.0.0.0. 13 Ahau 13 Pop
5.0.0.0.0. 12 Ahau 3 Zac
6.0.0.0.0. 11 Ahau 8 Uo
7.0.0.0.0. 10 Ahau 18 Sac
8.0.0.0.0. 9 Ahau 3 Zip
9.0.0.0.0. 8 Ahau 13 Ceh
10.0.0.0.0. 7 Ahau 18 Zip
11.0.0.0.0. 6 Ahau 8 Mac
12.0.0.0.0. 5 Ahau 13 Zotz´
13.0.0.0.0. 4 Ahau 3 Kankin
இதுவும் புரியவில்லையா……….? பரவாயில்லை இதை அப்படியே சிறிது விட்டுவிட்டு, ஒரு தேனீர் அருந்திவிட்டு, இந்த அட்டவணையைக் கவனியுங்கள். மாயனின் மொழியின் படி நாட்கள், மாதங்கள்வருடங்களுக்கான பெயர்களுடன் சில விளக்கங்கள் தருகிறேன் புரிகிறதா பாருங்கள்.  

  1 நாள் = 1 கின் (Kin)                              (1x1)                     1 day
20 கின் = 1 வினால் (Winal)                     (20x1)                 20 days
18 வினால் = 1 டுன் (Tun)                         (18x1)               360 days
20 டுன் = 1 காடுன் (Katun)                      (20x1)             7200 days
20 காடுன் = 1 பக்டுன் (baktun)                (20x1)        144,000 days
13 பக்டுன்= 1 முழுச் சுற்று ( great Cycle) (13x1)      1,872,000 days

 இங்கு 'கின்' என்பது நாளையும், 'வினால்' என்பது மாதத்தையும், 'டுன்' என்பது வருடத்தையும் குறிக்கும் சொற்கள். 'காடுன்', 'பாக்டுன்' என்பன அதற்கும் மேலே!
 1,872,000 நாட்கள் என்பது 5125 வருடங்கள்.

இப்படி 5125 வருடங்கள் எடுப்பதை, மாயன்கள் ஒரு முழுச் சுற்று என்கின்றனர். இது போல மொத்தமாக ஐந்து முழுச் சுற்றுகள் சுற்றி முடிய, பூமி தனது இறுதிக் காலத்தை அடையும் என்பது மாயன்களின் கணிப்பு. அதாவது கிட்டத்தட்ட 26000 வருடங்களில் (5x5125=25625) உலகம் இறுதிக் காலத்தை அடையும் (Doomsday).

 இதுவரை நான்கு முழுச் சுற்றுகள் முடிவடைந்து விட்டதாகவும், இப்போது ஐந்தாவது கடைசிச் சுற்று நடந்து கொண்டிருக்கிறதாகவும் மாயன்கள் சொல்லி இருக்கிறார்கள் (இது ஓரளவுக்கு இந்துக்களின் யுகங்களுக்கு பொருந்துவதாக இருக்கிறது). இதை இன்னும் ஆழமாகச் சொல்வதானால், ஐந்தாவது சுற்றின் முதல் நாள், கி.மு. 3114ம் ஆண்டு ஆவணி மாதம் 11ம் திகதி (11.08.3114 கி.மு) அன்று ஆரம்பித்து, 5125 வருடங்கள் கழித்து 21ம் திகதி மார்கழி மாதம் 2012ம் ஆண்டு (21.12.2012) அன்று, கிட்டத்தட்ட 26000 வருசங்களைப் சுற்றிப் பூர்த்தி செய்கிறது பூமி. அதாவது, இந்த நாளே உலகம் அழியும் எனப் பலர் நம்பும் இறுதி நாளாகும்

இதுவரை மாயன் சொல்லியவற்றைப் பார்த்தோம். இதை எல்லாம் ஒரு அறிவியல் விளக்கம் இல்லாமல் எம்மால் எப்படி நம்ப முடியும்? எங்கோ, எப்போதோ பிறந்த, யாரோ சொன்னதை நம்பி உலகம் அழியும் எனப் பயம் கொள்ள, பகுத்தறிவு அற்றவர்களா நாம்? எனவே நவீன விஞ்ஞானம் என்ன சொல்கிறது என்பதைக் கொஞ்சம் பார்க்கலாம். 
 இப்போ, நவீன வானவியல் என்ன சொல்கிறது என்று பாருங்கள்….!

சில காலங்களின் முன் 'ஹபிள்' (Hubble) என்னும் தொலை நோக்கிக் கருவியை 'நாசா' (NASA) வின்வெளிக்கு அனுப்பியது. அது வான்வெளியில் ஒரு 'செயற்கைக் கோள்' (Satellite) போல, பூமியைச் சுற்றிக் கொண்டு இருக்கிறது. அதன் மூலம் வின்வெளியை அவதானித்ததில் எங்கள் நவீன வானவியல் அறிவு பன்மடங்கு அதிகரித்தது.
இந்த 'ஹபிள்' மூலம் பலப் பல வானியல் உண்மைகளை நாம் கண்டறிந்தோம். அப்படிக் கண்டு பிடித்த விசயங்களில் சிலவற்றைமாயனுடன் சரி பார்த்ததில்தான், ஆராய்ச்சியாளர்களை வியப்பு ஆக்கிரமித்துக் கொண்டது. எங்கே இவர்கள் சொன்னதெல்லாம் 

உண்மையாகிவிடுமோ என்ற பயமும் கூடவே தொற்றிக் கொண்டது. 

 நாங்கள் இருக்கும் பால்வெளி மண்டலம் ஒரு விசிறி (Fan) போன்ற அமைப்பில் இருக்கிறதுஅத்துடன் அது தட்டையான வடிவிலும் காணப்படுகிறது. அந்த விசிறி அமைப்புக்கு பல சிறகுகள் (Wings) உண்டு. அந்த சிறகுகளில் ஒன்றின் நடுவே எமது சூரியக் குடும்பம் இருக்கிறது.
பால்வெளி மண்டலம் கோடிக் கணக்கான நட்சத்திரங்களைத் தன்னுள் உள்ளடக்கி வெண்மையாக, ஒரு பாய் போல, தட்டையாகக்  கிடையாகப் பரவியிருக்கிறது.
எங்கள் சூரியன், தனது கோள்களுடன், இந்தப் பால்வெளி மண்டலத்தில் ஒரு வட்டப் பாதையில் அசைந்து கொண்டு இருக்கிறது. அந்த அசைவு பால்வெளி மண்டலத்திற்கு செங்குத்தான திசையில் அமைந்திருக்கிறது. தயவு செய்து நான் இப்போ சொல்லி வருவதை மிக நிதானமாகக் கவனியுங்கள். இது கொஞ்சம் வானியல் கலந்ததாக இருப்பதால், விளங்கிக் கொள்வது கடினமாக இருக்கும். இது விளங்காத பட்சத்தில், யாரிடமாவது கேட்டுப் புரிந்து கொள்ள முயற்சியுங்கள். .

ஒரு வீட்டின் கூரையில் மாட்டப் பட்டிருக்கும் மின்சார விசிறி (Fan) கிடையாகச் சுற்றுகிறது.  

எங்கள் பால் வெளி மண்டலமும் அப்படித்தான் சுற்றுகிறது. ஆனால் எங்கள் சூரியன், பால்வெளி மண்டலத்தில் இருந்து கொண்டே, மேசையில் இருக்கும் மின்விசிறி (Table fan) போல, பால்வெளி மண்டலத்துக்குச் செங்குத்தாக சுற்றுகிறதுஎன்னால் முடிந்த அளவுக்கு இதை படமாக வரைந்திருக்கிறேன். புரிகிறதா எனப் பாருங்கள்.
எங்கள் பூமிக்கு நடுவாக பூமத்திய ரேகை இருப்பது போல, பால்வெளி மண்டலத்துக்கும் நீளமான, ஒரு மத்திய ரேகை உண்டு. இதை Galactic Equator என்று சொல்வார்கள்.
எங்கள் சூரியன் தனது வட்டப் பாதையில் செங்குத்தாக சுற்றும் போது, பால்வெளி மண்டலத்தின் மத்திய ரேகையைச் ஒரு குறித்த காலத்தின் பின்னர் சந்திக்கிறது. இனி நான் சொல்லப் போவதுதான் மிக முக்கியமான ஒன்றுஎங்கள் சூரியன் இப்படிப் பால்வெளி மண்டலத்தின் மத்திய ரேகையை (Galactic Equator) சந்திக்க எடுக்கும் காலம் என்ன தெரியுமா……..? 26,000 வருடங்கள்.

 அதாவது சூரியன், பால் வெளி மண்டலத்தில் தனது நகர்வின் போது, இருந்த இடத்திற்கு, ஒரு சுற்றுச் சுற்றி மீண்டும் வருவதற்கு 26,000 வருடங்கள் எடுக்கிறது. 26,000 வருடங்களுக்கு ஒரு முறை இப்படிச் சுற்றி, மத்திய ரேகையைச் சந்திக்கிறதுஇம்முறை அந்த அச்சை நமது சூரியன் எப்போது சந்திக்கப் போகிறது தெரியுமா...? 2012ம் ஆண்டு மார்கழி மாதம் 21ம் திகதி. 
அதாவது மாயன்களின் நாட்களிகளின் மொத்தச் சுற்றுகளுக்கு எடுக்கும் 26000 வருடங்களும், பால்வெளி மண்டலத்தின் அச்சை அடையும் காலமான 21.12.2012 என்பதும் அச்சு அசலாக எப்படிப் பொருந்துகிறது

இத்துடன் ஆச்சரியம் தீர்ந்து விடவில்லை. இன்னும் ஒரு ஆச்சரியமும் இதில் உண்டு

 சூரியன், பால்வெளி மண்டலத்தைச் சந்திக்கும் இடத்திற்கு மிக அருகிலேயே கருமையான ஒரு பள்ளம் (Dark Rift) போன்ற இடம் இருக்கிறதையும் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இதன் ஈர்ப்பு விசையினால் சூரியக் குடும்பமே அதனுள் சென்று விடும் ஆபத்து உண்டு அல்லது ஏதாவது பெரிய மாற்றம் ஏற்படும் ஆபத்து உண்டு என்பதையும் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.
ஏதாவது ஒரு காலத்தில் இப்படிச் சூரியன் மத்திய ரேகையைத் தொடும் போது, கருப்புப் பள்ளத்தின்  ஈர்ப்பு விசை அதை இழுக்கலாம்ஒரு முறை நடக்காவிட்டாலும்ஏதாவது 26,000 வருசங்களுக்கு ஒரு முறை அப்படி நடக்கலாம் என்பதையும் விஞ்ஞானிகள் கண்டு கொண்டனர். இப்படி ஒரு அறிவியல் சாத்தியங்களை சொல்லிவிடக் கூடிய ஒரு இனம் இருக்குமென்றால், நிச்சயம் அந்த இனத்தை மதித்தே தீர வேண்டும்.
சரி......! இது மட்டும்தான் மாயனின் 26000 வருசக் கணிப்புப் பற்றிய ஆச்சரியம் என்று நீங்கள் நினைத்தால், மாயன்கள் பற்றி தப்புக் கணக்குப் போட்டுவிட்டீர்கள் என்று அர்த்தம். இது மட்டும் இல்லை……! இன்னுமொன்றும் உண்டு. அது, இதைவிட ஆச்சரியமானது. மாயனையே தலையில் வைத்துக் கொள்ளலாம் போல நினைக்க வைக்கும் ஒன்று.
 
 அது பற்றி அறிய அடுத்த தொடர் வரை கொஞ்சம் காத்திருங்கள்........!
 
பாகம்: 12
உலக அழிவு பற்றிப் பேச ஆரம்பித்த இந்தக் கணத்தில், உலக அழிவு பற்றிய ஒரு முழுமையான விளக்கத்தை நான் உங்களுக்கு கொடுக்க வேண்டும். உலகம் அழியும் என்று நான் சொல்வதாக பலர் நினைக்கின்றனர். சிலர் நான் எழுதுவதில் உள்ள நம்பகத்தன்மையை வைத்து, உலகம் அழியும் என்று தீவிரமாக நம்பி, கொஞ்சம் பயம், கொஞ்சம் பதட்டம் ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றனர். சரியாக ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். 2012 இல் உலகம் அழியும் அல்லது அழியாது என்னும் இருநிலைகளே தற்போது எங்கள் முன்னால் இருக்கிறது. உலகமே இரண்டாகப் பிரிந்து, இந்த இரண்டு நிலைகளுக்கும் ஏற்ப அவற்றிற்கான ஆதாரங்களை முன்வைக்கின்றனர். இதில் ஏதாவது ஒரு முடிவைக் கொடுக்கும் நடுவராக நான் இருக்க முடியாது. ஆனால் இந்த இரு நிலைகள் பற்றியும் அறிவியல் ஆதாரங்களுடன்  உங்களுடன் பகிர்பவனாக என்னுடைய பொறுப்பை நான் எடுத்துக் கொள்ளலாம். அதன் மூலம் ஒரு முடிவுக்கு வரவேண்டியது உங்கள் கையில்தான் இருக்கிறது. 

கடந்த தொடரில், 2012 டிசம்பர் 21ம் திகதி சூரியன், பால்வெளி மண்டலத்தின் (Milky way) மத்திய கோட்டை (Equator) அடைகிறது என்றும், கரும் பள்ளம் என்று அழைக்கப்படும் Dark rift ஐ அண்மிக்கிறது என்றும், இந்த நிகழ்வுகள் 26000 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் நிகழ்வுகள் என்றும் சொல்லியிருந்தேன். ஆனால் நான் சொல்லாமல் விட்டது ஒன்றும் உண்டு. அது என்ன தெரியுமா? பால்வெளி மண்டலத்தின் மையப் புள்ளியும், சூரியனும், எங்கள் பூமியும், பால்வெளி மண்டலத்தின் மத்திய கோட்டினூடாக, ஒரே நேர்கோட்டில்  (Alignment) வரிசையாக வருகின்றன. இந்த ஆச்சரியகரமான நிகழ்வு 21.12.2012 இல் மிகச் சரியாக நடைபெறுகிறது. 

இது மட்டுமல்ல 26000 வருடங்களின் ஆச்சரியங்கள். இன்னுமொன்றும் உண்டு. அதுபற்றி இப்போது  பார்க்கலாம். 

சின்ன வயதில் நீங்கள் பம்பரம் சுற்றி விளையாடியிருக்கிறீர்களா? அநேகமாக அந்தப் பாக்கியத்தைத் தவறவிட்டவர்கள் சினிமாவிலாவது பம்பரத்தின் பயன்களைப் பார்த்திருப்பீர்கள். பம்பரம் ஒன்றைச் சுழல விட்டால், அது தன்னைத் தானே மிகவும் வேகமாகச் சுற்றும் அல்லவா? அப்போது பம்பரத்தில் நடைபெறும்  வேறு ஒரு செயலையும் நீங்கள் கவனிக்கத் தவறியிருக்க மாட்டீர்கள். அதாவது பம்பரம் சுற்றும் போது, பூமியில் தொட்டுக் கொண்டிருக்கும் கூரான பகுதி ஓரிடத்தில் நிற்க, மேற்பகுதி தலையை ஆட்டியபடியே சுற்றும். அப்படித் தலையாட்டும் பம்பரத்தை நீங்கள் நிச்சயம் பார்த்திருப்பீர்கள். அதைச் சரியாகக் கவனித்திருப்பீர்கள் என்றால், அந்தத் தலையாட்டல், ஒரு கிடையான வட்டப் பாதையிலேயே இருக்கும்.
நாம் வாழும் பூமியும் 23.5 பாகையில் (degrees) சாய்ந்திருக்கும் விதமாக, ஒரு அச்சில் பம்பரம் போலச் சுற்றுகிறது. அப்படிச் சுற்றும் பூமியும் ஒரு தலையாட்டலுடன்தான் சுற்றுகிறது. இந்தத் தலையாட்டலை  'பிரிசெஸன்' (Precession) என்கிறார்கள்.
எங்கள் பூமி, பம்பரம் போல மிக வேகமாகத் தலையாட்டாமல், மிக மிக மெதுவாக அந்தத் தலையாட்டலைச் செய்கிறது. பூமியின் வடபகுதி, தனது அச்சில் ஒரு இடத்தில் ஆரம்பித்து, வட்டப் பாதையில் இந்தத் தலையாட்டலைச் செய்து, மீண்டும் ஆரம்பித்த இடத்துக்கு வருகிறது. அந்தத் தலையாட்டும் வட்டத்துக்கு எடுக்கும் காலம் எவ்வளவு தெரியுமா? 26000 வருடங்கள். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?

இந்த 'பிரிசெஸன்' (Precession) பூச்சியப் புள்ளியில் ஆரம்பித்து, 360 பாகையினூடாகச் சுற்றி மீண்டும் பூச்சியப் புள்ளியை அடைய, 26000 வருடங்கள் எடுக்கிறது. அதாவது ஒரு பாகை நகர, 72 வருடங்கள் எடுக்கிறது. அவ்வளவு மெதுவான தலையாட்டல். 

 "இந்தப் பிரிசெஸனில் அப்படி என்னதான் முக்கியம் இருக்கிறது?" என்று நீங்கள் கேட்கலாம். மிகச் சரியாக 21.12.2012 அன்று, பூமி தனது பிரிசெஸனின் முழுச் சுற்றை முடித்துப் பூச்சியத்துக்கு வருகிறது என்பதுதான் இங்கு விசேசம். இந்த பூச்சிய நிலையை 'போலாரிஸ்' (Polaris) அல்லது 'போல் ஸ்டார்' (Pole Star) என்கிறார்கள். 



சரியாகக் கவனியுங்கள்......!
21.12.2012 அன்று, காலக்டிக் ஈக்வேட்டர் (Galactic Equvator) என்னும் பால்வெளி மண்டலத்தின் மத்திய ரேகையைச் சூரியன் அடைகிறது. அதனால், பால்வெளி மண்டலத்தின் மையப் புள்ளியும், சூரியனும் 'மத்தியரேகை' என்னும் நேர் கோட்டில் வருகின்றன. அத்துடன் எங்கள் பூமியும் அதே நேர் கோட்டில் வருகிறது. அத்தோடு நிற்காமல், இந்தப் பிரிசெஸன் என்னும் தலையாட்டலின் பூச்சியப் புள்ளியான போலாரிஸையும், பூமி 26000 வருடங்களின் பின்னர் மிகச்சரியாக அடைகின்றது. அத்தோடு டார்க் ரிஃப்டையும் மிக அண்மிக்கிறது. 26000 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் மிக அற்புதமான ஒரு வானிலை வரிசையாக இதைக் கொள்ளலாம். இப்படி எல்லாமே சேர்ந்த ஒரு நிகழ்வு, அதுவும் மாயன் சொல்லிய 26000 வருடங்களில் நடைபெறுவது, ஒரு தற்செயல் நிகழ்ச்சியாக இருக்கவே முடியாது. அப்படி இருக்க முடியாது என்னும் ஆச்சரியம்தான், எல்லோரும் இந்த விசயத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்துக்குக் காரணமாகிறது.

இப்படி ஒரு நிகழ்வு நடக்கும் போது, உலகம் அழியும் என்று நாம் ஏன் பயப்பட வேண்டும்? அப்படி உலகம் அழியும் அளவிற்கு என்ன விளைவுகள் ஏற்படும்? என்பது போன்ற கேள்விகளுக்கு, பதில்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா? அதைத் தெரிந்து கொள்வதற்கு, 'உலகம் அழியும்' 'உலகம் அழியும்' என்கிறோமே, அப்படி ஒரு அழிவு ஏற்பட்டால், அது எப்படி ஏற்படும் என்பதையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும் அல்லவா
உலகம் அழிவது என்றால் அது இரண்டு விதத்தில்தான் அழிய முடியும். 1. சூரியன் அழிவதால் ஒட்டுமொத்தமாக அதனுடன் சேர்ந்து உலகமும் அழிய வேண்டும்.  2. உலகம் மட்டுமே அழிய வேண்டும். இந்த இரண்டு சம்பவங்களுமே உலக அழிவின் அடிப்படையாகின்றது. இங்கு இன்னுமொரு கேள்வியும் வருகிறது. உலகம் அழிவது என்றால், மொத்தமாக உலகமே வெடித்துச் சிதறி இல்லாமல் போகுமா? அல்லது உலகம் அப்படியே இருக்க, அதில் வாழும் உயிரினங்கள் அழிந்து போகுமா

மேலே உள்ள கேள்விகளுக்கான பதில்களை, பலவிதங்களில் ஆதாரபூர்வத்தோடு விளக்கி எம்மைத் தூங்கவே விடாமல் ஒரு சாரார் செய்து கொண்டிருக்க, இல்லை, இவையெல்லாம் பொய். அப்படி நடப்பதற்கு சாத்தியமே இல்லை என்று இன்னுமொரு சாரார் சொல்லிவருகின்றனர். இதில் உள்ள நகைச்சுவை என்னவென்றால், இதுவரை உலகம் அழியும் என பலமுறைகள், பல விதங்களில் சொல்லப்பட்டு வந்திருக்கின்றது. அந்த நேரங்களிலும் அழியும், அழியாது என இரு நிலைப்பாடு இருந்தது. ஆனால் அப்போது, அவையெல்லாம் ஏதோ ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதால், நம்பிக்கைவாதிகளுக்கும், அறிவியலாளர்களுக்குமான விவாதங்களாக அவை அமைந்தன. ஆனால் 2012 இல் உலகம் அழியும் என்பதில் இரண்டு பகுதிகளாகப் பிரிந்திருக்கும் இருவருமே அறிவியலாளர்கள்தான். அழியும் என்று சொல்வதும் அறிவியலாளர்கள்தான். அழியாது என்று சொல்வதும் அறிவியலாளர்கள்தான். உண்மை இவர்கள் இருவருக்கும் இடையில் நின்று ஊசலாடிக்கொண்டு இருக்கிறது.
முதலில் மேலே சொன்ன அந்த அற்புதமான நிகழ்வு நடை பெற்றால் எப்படிப்பட்ட விளைவுகள் ஏற்படலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர் என்று பார்க்கலாம்.  

பால்வெளி மண்டல மத்தியும், சூரியனும், பூமியும் இருக்கும் நேர் கோட்டுத் தன்மையினால், சூரியனுக்கு ஏற்படும் 'காஸ்மிக்' (Cosmic) கவர்ச்சி விளைவுகளால் உருவாகும் ஈர்ப்பு விசை மாற்றங்களால், பூமியின் அச்சுத் தடம் மாற வாய்ப்புண்டு. அதாவது இப்போது 23.5 பாகை சாய்வில், வடக்குத் தெற்காக இருக்கும் பூமியின் அச்சு, இடம்மாறி பூமியின் வடதுருவம், தென்துருவம் என வேறு ஒரு இடத்துக்கு மாறிவிடும். அதனால் இப்போது உள்ள துருவங்களின் பனி (Ice) உருகி, பூமியே தண்ணீரில் மூழ்கிவிடும். இந்த விளைவுக்கு இந்தப் பிரிசெஸன் சுற்றுப் பூர்த்தியாகி போலாரிஸுக்கு வருவதுதான் காரணமாகவும் அமையலாம். அப்படி பூமியின் அச்சில் மாற்றம் ஏற்படால், சூரியக் குடும்பத்தில் உள்ள மற்றக் கோள்களுக்கோ, அல்லது சூரியனுக்கோ எந்த அழிவும் வராது. பூமியில் உள்ளவை மட்டுமே தங்கள் அழிவுகளைச் சந்திக்கும்.

மேலும், பூமியின் அச்சுக்கு எதுவும் நடக்காவிட்டாலும், காஸ்மிக் கதிர்களின் அதிகபட்ச வீச்சுக்களால் பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் இறந்துவிடும். அத்துடன் மின்காந்த விளைவுகள் உடைய கதிர்களின் தாக்கத்தால் பூமியின் உள்ள மின்சாரங்களும், சாதனங்களும் தடைப்பட்டு பூமியில் எதுவுமே இயங்காமல் நின்றுவிடும். இதற்குமேலும் உலகம் எப்படி அழியும் என்று சொன்னால் இன்று நித்திரை கொள்ள முடியாமல் போய்விடும். எனவே வாராவாரம் வரிசையாக அதைப் பார்க்கலாம். 

எது எப்படி இருப்பினும், ஆச்சரியகரமாக மாயன்கள் சூரியனின் அழிவு, பூமியின் அழிவு என இரண்டைப் பற்றியுமே மிகத் தெளிவாகச் சொல்லி இருக்கிறார்கள். பூமி அழியும் என்னும் நம்பிக்கையை ஊட்டி, உங்களைப் பயமுறுத்துவது என் நோக்கமல்ல. மாயன்கள் பூமியின் அழிவு பற்றி, என்ன சொல்லி இருக்கிறார்கள்? ஏன் சொல்லி இருக்கிறார்கள்? என்பதை மாயன்கள் சார்பாக விளக்குவது மட்டுமே என் நோக்கம். அழிவு வரலாம். வராமலும் போகலாம். ஆனால் மாயன்கள், உலக அழிவு பற்றிச் சொல்லி இருக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை.

ஆனால் இவ்வளவு காலமும் அனைவரும், உலகம் அழியப் போகிறது என்று அலறிக்கொண்டிருக்க, தேமே என்று இருந்து கொண்ட நாஸா (NASA) ஏனோ திடீரென விழித்துக் கொண்டது. தனது இணையத் தளம் மூலமாக உலகம் அழியாது என்பதற்கு தன்சார்பாக பல விளக்கங்களையும் அது கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் நாஸாவின் நம்பகத்தன்மையில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது என்று பார்க்கும் போது, அங்கே  தவறாக ஏதோ நெருடுவது போல இருப்பது என்னவோ உண்மை.

சமீபத்தில் மிகப்பிரபலமாகப் பேசப்பட்ட விக்கிலீக்ஸ் (Wikileaks) இன் யூலியன் அஸ்ஸாஞ்சை (Julian Assange) உங்களுக்கு தெரிந்திருக்கும். அவர் பாரதூரமான பாலியல் குற்றச்சாட்டின் அடிப்படையில் சமீபத்தில் முடக்கப்பட்டார். ஆனால் அவர் அப்படி முடக்கப்பட்டதற்கு காரணமே நாம் நினைத்துக் கொண்டிருக்கும் எதுவுமல்ல, வேறு மிக முக்கியமான ஒன்றுதான் அதற்குக் காரணம் என தகவல்கள் கசிந்து கொண்டிருக்கின்றன. அதற்கும் உலக அழிவுக்கும் சம்மந்தம் இருக்குமோ என இப்போது பலர் நம்புகின்றனர்.  
'கேபிள்கேட்' (Cablegate) என்னும் பெயரால், 250000 அமெரிக்காவின் ராஜதந்திர அறிக்கைகளை அஸ்ஸாஞ் கணணி மூலம் கடத்தி வெளியிட்டார். அந்த அறிக்கைகளில் முக்கியமானதாக கருதப்பட்டது என்ன தெரியுமா? அயல் கிரகங்களில் இருந்து பறக்கும் தட்டுகள் (ufo) பூமிக்கு வந்திறங்கியது என்ற செய்திகள்தான். அத்துடன் இதவற்றை நாஸாவின் மூலம் ஆதாரத்துடன் அறிந்து கொண்ட அமெரிக்க அரசாங்கம், திட்டமிட்டு அனைத்தையும் மறைத்திருக்கிறது. கடந்த வருடங்களில் மட்டுமே 400க்கும் அதிகமான சம்பவங்கள் பறக்கும் தட்டுகள் பூமியில் வந்திறங்கியது சம்மந்தமான ஆதாரங்கள் அஸ்ஸாஞ் வெளியிட்ட அறிக்கைகளில் இருக்கின்றது. அதுவும் குறிப்பாக பிரித்தானியாவில் பறக்கும் தட்டுகள்  வந்திறங்கியது தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த சம்பவங்களை அமெரிக்க 'கார்டியன்' (The Guardian) பத்திரிக்கைக்கு சாட் (Chat) மூலம் அஸ்ஸாஞ் நேரடியாகவே தெரிவித்திருக்கிறார். இந்தச் செய்திகளை ஐரோப்பாவின் மிகமுக்கிய பத்திரிக்கைகள் எல்லாமே தலைப்புச் செய்திகளாக வெளியிட்டன. 
பறக்கும் தட்டுகள் பற்றி எப்போது அஸ்ஸாஞ் சொல்ல ஆரம்பித்தாரோ, அப்போதே அவரை நோக்கி பாலியல் குற்றச்சாட்டுகளும் பறக்கும் தட்டுகள் போல பறந்துவரத் தொடங்கின. அரசுகள் அனைத்தும் அவருக்கு எதிராகின. அரசுகள் அனைத்துக்கும் மக்களுக்கு உண்மையான செய்திகள் சென்று அடைவதில் தயக்கம் இருக்கின்றது.  அவற்றிற்கு பல காரணங்கள் இருக்கின்றன. மக்களுக்கு அதியுயர் ஸ்தானத்தில் இருப்பவை அரசுகள்தான். அவற்றையும் விட சக்தி வாய்ந்த மனிதர்கள் வேற்று உலகில் இருக்கிறார்கள் என்று மக்களுக்குத் தெரிந்தால், அவர்கள் அரசுகளை மதிக்கமாட்டார்கள், கட்டுப்பட மாட்டார்கள். இதனால் நாடுகளின் சமநிலைகள் குளம்பிவிடலாம். எனவே அரசுகள் இப்படிப்பட்ட செய்திகள் அனைத்தையும் மக்களுக்கு சென்றடையாமல் இரகசியமாகவே பாதுகாக்கின்றன. அப்படிப் பாதுகாப்பதில் மிக முக்கியமாக இந்த இருக்கும் ஸ்தாபனங்களில் ஒன்றுதான் நாஸா. 

நாஸா மறைத்த மிக முக்கியமான வேறு ஒன்றும் உண்டு. அது பற்றியும் நீங்கள் தெரிந்து கொள வேண்டியது அவசியமாகிறது. அதுகூட உலக அழிவோடு சம்மந்தப்பட்டதுதான்.

அமெரிக்காவில் விண்வெளி ஆராய்ச்சிக்கென்றே அமைக்கப்பட்ட ஸ்தாபனம்தான் 'நாஸா' (NASA-The National Aeronautics and Space Administration) என்பதாகும். இந்த நாஸா மூலம்தான் விண்வெளி வரலாற்றுக்குரிய 'மிகை அறிவை', மனித இனம் அதிக பட்சம் பெற்றுக் கொண்டது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை. விண்வெளியை ஆராய நாஸா அனுப்பிய தொலைநோக்கிக் கருவியுடன் கூடிய, செயற்கைக் கோள்தான் 'ஹபிள்' (Hubble) ஆகும். இந்த ஹபிள் தொலை நோக்கியால் பிரபஞ்சத்தின் பல உண்மைகளையும், இரகசியங்களையும் மனிதன் அறிந்து கொண்டான்.

ஆனாலும், விண்ணில் உள்ள அனைத்தையும் அறிந்து கொண்ட மனிதனுக்கு, ஒரு தவிர்க்க முடியாத சந்தேகம் தோன்றியது. மனிதனின் சாதாரணக் கண்களால் பார்க்கக் கூடிய கோடானு கோடி நட்சத்திரங்களையும், நட்சத்திர மண்டலங்களையும் மனிதன் பார்க்கும் அதே வேளையில், மனிதக் கண்ணால் பார்க்க முடியாத ஏதாவது, விண்வெளியில் இருக்கலாமோ என்பதுதான் அந்தச் சந்தேகம்.
விண்வெளியில் உள்ள நட்சத்திரங்கள், தமக்கென சுயமான ஒளியைக் கொண்டிருப்பதால், தொலை நோக்கிக் கருவிகள் மூலம் அவற்றைக் காணக் கூடியதாக இருக்கிறது. ஆனால் ஒளியே இல்லாத கோள்கள் அப்படி அல்ல. அவை இருட்டில் இருப்பதால், மனிதனால் கண்டு பிடிக்கப்படாமலே கோடிக் கணக்கில் விண்வெளியில் சுற்றித் திரிகின்றன. இப்படிப் பட்டவற்றைக் கண்டு பிடிப்பதற்கென்றே மிகுந்த செலவில், நாஸா ஒரு தொளைநோக்கிக் கருவியை கண்டுபிடித்தது. IRAS (Infrared Astronomical Satellite) என்று பெயரிடப்பட்ட அந்தத் தொலைநோக்கிக் கருவியைச் செயற்கைக் கோள் மூலம்,1983 ம் ஆண்டு தை மாதம் 25ம் திகதி விண்வெளிக்கு அனுப்பியது. இந்தத் தொலைநோக்கிக் கருவி 'இன்பிரா ரெட்' (Infra Red) என்னும் கதிர்களைச் செலுத்தி, விண்ணில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத அனைத்தையும் படம்பிடித்து பூமிக்கு அனுப்பியது. நமது உடலில் 'எக்ஸ் கதிர்கள்' (X Rays) செலுத்தப்பட்டு, அது உடம்பை ஊடுருவி எலும்புகளைப் படம் பிடிப்பது போல, இந்தத் தொலைநோக்கிக் கருவியும், இன்பிரா சிவப்புக் கதிர்களைச் செலுத்தி விண்வெளியை ஆராய்ந்து படமெடுக்கிறது.
'IRAS' விண்வெளியை ஆராய்ந்த போது, தற்செயலாக கோள் ஒன்றைக் கண்டு பிடித்தது. எமது சூரியக் குடும்பத்தின் எல்லைக்கு அப்பால், சிவப்பு நிறத்தில் ஒரு வட்ட வடிவமான கோள் போன்ற ஒன்றை அது படம் பிடித்தது. அந்தக் கோளை மேலும் ஆராய்ந்த போதுதான் நாஸாவுக்கு அந்தப் பயங்கரம் உறைத்தது. அதாவது அந்தக் கோள், மிகச் சரியாக எமது பூமியை நோக்கி நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது என்பதுதான் அந்தப் பயங்கரம்.
'இது என்ன புதுக் கதை' என்று அதை மேலும் மேலும் ஆராய்ந்த நாஸா, திடீரென அந்தத் தொலை நோக்கிக் கருவியை விண்ணிலிருந்து கீழே இறக்கியது. தனது ஒட்டு மொத்தத் திட்டத்தையே இடை நிறுத்தி மண்ணுக்கு வந்தது IRAS. காரணம் கேட்டால், அந்தத் தொலை நோக்கிக் கருவி பழுதடைந்து விட்டதாக ஒரு காரணத்தையும் நாஸா சொன்னது. 

இந்த விசயம் பல அறிவியலாளர்களளுக்கும், மக்களுக்கும் நாஸாவின் மேல் சந்தேகம் ஏற்படக் காரணமாக அமைந்தது. நாஸா சொன்ன காரணங்களைப் பலர் ஏற்றுக் கொள்ளவே இல்லை. நாஸா எதையோ மறைக்கிறது என்ற முடிவுக்கு அவர்களை இட்டுச் சென்றது அந்தச் சந்தேகம். ஆனால் நாஸாவோ அந்தத் தொலை நோக்கிக் கருவியைப் பாதுகாக்கும் குளிர்பதன வசதி கெட்டு விட்டதாகவும், அதனால்தான் அந்த தொலை நோக்கிக் கருவி மண்ணுக்கு இறக்க வேண்டி வந்தது என்றும் சளைக்காமல் சொன்னது.

உண்மையில் 'IRAS' கண்ட அந்தக் கோள்தான் என்ன? அந்தக் கோளைக் கண்டவுடன் ஏன் நாஸா தனது ஆராய்ச்சியையே இடை நிறுத்தியது? அப்படி என்னதான் அந்தக் கோளில் நாஸாவே பயப்படும்படியான பிரச்சனை உண்டு? இப்படிப்பட்ட பல கேள்விகளை பல நாட்டு விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கேட்கத் தொடங்கினர்.

 முடிவில் அவர்களுக்கு அதற்கான விடை கிடைத்தது. அந்த விடை 'சுமேரியர்' (Sumerian) என்னும் மிகப் பழமை வாய்ந்த ஒரு இனத்தின் கல்வெட்டுகளிலும் கிடைத்தது. விடை கிடைத்தாலும் அது பயங்கரமானதாகவே இருந்தது.

அந்தக் கோள்தான் நவீன விஞ்ஞானிகளால் 'ப்ளானெட் எக்ஸ்' (Planet X) என்று பெயரிடப்பட்டதும், ஆதிகால மனிதர்களால் 'நிபுரு' (Niburu) என்று பெயரிட்டதுமான, பூமியில் வாழும் அனைவருக்கும் எமனாக வந்த கருஞ்சிவப்புக் கோள் ஆகும். இந்தக் கோள் பூமியை 21.12.2012 அன்று தாக்கும் என்பதுதான் மேலதிகமாக இதில் கிடைக்கப்பட்ட பயங்கரமான செய்தியுயாகும். 

நிபுரு (Planet X) பற்றி மேலும் அறிய, அடுத்த வாரம் வரை பொறுத்திருங்கள்.


பாகம்: 13


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...